நீட் தேர்வால் என் குடும்பத்திலும் தற்கொலை நிகழ்ந்துள்ளது.. எனக்கும் வலி தெரியும்...நடிகை சாய்பல்லவி
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வால் தமது குடும்பத்திலும் உறவினர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் மாணவர்களின் வலி எனக்கும் புரிகிறது என்றும் நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 12-ந் தேதி நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு தொடர்பான முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன.
நீட் வினாத்தாள் ரூ35 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக பலர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவில் நீட் நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததும் வெளியே வந்தது. இதனால் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன.

தமிழகத்தில் எதிர்ப்பு
கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் வகையில்தான் நீட் தேர்வு உள்ளது என்பது பொதுவான கருத்து. இதனால் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் தற்கொலை செய்து கொள்கிற அவலமும் தொடர்கிறது. தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு காரணமாக 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மே.வங்கம், மகாராஷ்டிரா
இதையடுத்து நீட் நுழைவுத் தேர்வை கைவிட வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை பின்பற்றி மேற்கு வங்க மாநிலத்திலும் நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. மகாராஷ்டிராவிலும் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இதனிடையே கடந்த 12-ந் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் நீட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன; நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று அம்மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சாய் பல்லவி
இந்நிலையில் நடிகை சாய்பல்லவி நீட் தேர்வு முறைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சாய் பல்லவி கூறுகையில், மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு வைப்பது மாணவர்களை மனதளவில் பாதிக்க வைக்கும். பெற்றோர்களும் நண்பர்களும் மாணவர்களுடன் பேசி நம்பிக்கையை ஊட்ட வேண்டும். என் குடும்பத்திலும் நீட் தற்கொலை சோகம் நிகழ்ந்திருக்கிறது. மதிப்பெண் குறைந்து விட்டதால் எனது உறவினர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இத்தனைக்கும் அவர் நல்ல மதிப்பெண் எடுத்தவர்தான்.. தாழ்வு மனப்பான்மையால் அத்தகைய முடிவை எடுத்துவிட்டார். எனக்கும் மாணவர்களின் வலி புரியும் என கூறியிருக்கிறார்.

சூர்யா வீடியோ
ஏற்கனவே நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அண்மையில் அவர் வெளியிட்ட வீடியோவில், எந்த ஒரு கவலையாக இருந்தாலும் சில காலத்துக்குப் பிறகு சரியாகிவிடும். மனதில் கஷ்டம் இருந்தால் பிடித்தவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள். நம்பிக்கை, தைரியத்துடன் இருந்தால் அனைத்தும் சாத்தியம். ஒரு தேர்வு உங்கள் உயிரைவிட பெரியது இல்லை. தற்கொலை, உங்களை ரொம்ப பிடித்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை. சாதிக்கிறதுக்கு அத்தனை விஷயங்கள் இருக்கு. மாணவர்கள் இந்த தற்கொலை எண்ணத்தில் இருந்து மீள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications