மெல்லமாய் மாயமாகும் மய்யம்..அடுத்து விழுந்தது வினோதினியின் விக்கெட்! கட்சியை கொஞ்சம் கவனிங்க ஆண்டவரே!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் நடிகை வினோதினி. ஏற்கனவே பலர் கட்சியை விட்டு சென்றுவிட்ட நிலையில் மேலும் ஒரு விக்கெட் விழுந்து இருப்பது நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பிருந்தே நடிகர் கமல்ஹாசன் அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் திரைத்துறையை சார்ந்தே இருப்பதால் பல நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் அடுத்தடுத்து பல விலகல் அறிவிப்புகள் இருக்கலாம் என்கின்றனர் கமல்ஹாசனின் 'அரசியல் ரசிகர்கள்'..
தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக பயணித்து வரும் நடிகர் கமல்ஹாசன் அரசியலில் கால் பதித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தொடங்கிய அவரது திரை பயணம், நடன உதவியாளர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பல்வேறு பரிணாமங்களை தாண்டி பயணித்து வருகிறது. 5 தலைமுறைகளை தாண்டி இன்னும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் ஆண்டவர்.

அரசியல் கட்சியை ஆரம்பித்தாலும், திரையுலகில் அவர் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த அவருக்கு வெற்றி தேவை என்ற சூழலில் விக்ரம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. அதற்கு பிறகாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 கமலை அதல பாதாளத்தில் கொண்டு போய் சேர்த்தது. தொடர்ந்து தக் லைஃப் என அடுத்தடுத்து படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் கமல்ஹாசன்.
ஆனாலும் அரசியலில் அவரது பயணம் சரிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை ஆரம்பித்து சில தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நீதி மய்யம். சில தொகுதிகளில் கௌரவமான ஓட்டுக்களை பெற்றாலும், கட்சியின் தலைவரான கமல்ஹாசனை கோவையில் பாஜகவிடம் வீழ்ந்தார்.
இதை அடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்ற நிலையில் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் குறிப்பிட தகுந்த அளவு வெற்றியைப் பெறவில்லை. அதற்கு அடுத்த நாட்களிலும் தீவிர அரசியலில் ஈடுபடாத கமல் விக்ரம், பிக் பாஸ், இந்தியன் - 2 உள்ளிட்ட தான் சார்ந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தினார்.
இதனால் அறிக்கை, ட்விட்டர் அரசியலோடு நின்று விட்டது அக்கட்சி. தொண்டர்களை சந்திப்பது பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என அரசியல் களத்திற்கு தேவையான எதையும் கமலஹாசன் மேற்கொள்ளாததால் பல மாவட்டச் செயலாளர்கள் சோர்வடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்த கமல், சுமார் 10 தொகுதிகளில் மட்டும் பிரசாரம் மேற்கொண்டார்.
காங்கிரஸின் ராகுல் காந்தி உடனான நெருக்கம் காரணமாகவே அவர் திமுக கூட்டணியில் இணைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் விரைவில் அவர் மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் அவரது கட்சியினர். ஆனால் கட்சி பணிகள் குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியாகாதது நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கடைசியாக ஆகஸ்ட் மாதத்தில் கமல்ஹாசன் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதற்கு பிறகாக சினிமா துறை சார்ந்து மட்டுமே நடிகர் கமல்ஹாசன் பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார்.
அதிகபட்சம் மக்கள் பிரச்சினை, அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு ட்விட்டரில் மட்டுமே பதிவு போட்டு வருகிறார். இதற்கிடையே பல நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யத்தை விட்டு விலகி வருகின்றனர். கமல் கட்சி ஆரம்பித்தபோது முக்கிய முகங்களாக இருந்த பொன்ராஜ், குமரவேல், மவுரியா, சந்தோஷ் பாபு, மகேந்திரன், பத்மப்பிரியா, புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் அக்கட்சியில் இருந்து விலகி வேறு வேறு கட்சிகளில் பயணித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மய்யத்திலிருந்து வருத்தத்துடன் வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார் நடிகை வினோதினி. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்சியில் சோம்பேறியாக செயல்பட்டதாகவும், அதன் காரணமாகவே தற்போது அரசியலில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டிருக்கிறார். அவரை குறிப்பிடுகிறாரா? அல்லது கட்சியின் தலைவரை குறிப்பிடுகிறாரா? என்ற விவாதம் தனியே ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சினிமாவில் காட்டும் ஆர்வத்தை அரசியலில் கமல் காட்டாததன் காரணமாகவே பலரும் கட்சியை விட்டு ஓடி வருகின்றனர். இனியும் மய்யத்தை கமல் கவனிக்காவிட்டால் அவரும் வெளியேற வேண்டியதுதான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications