சென்னை ஈசிஆர் கார் துரத்தல் சம்பவம்.. மேலும் 1 தனிப்படை அமைத்து இளைஞர்களை தேடும் போலீசார்!
சென்னை: சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை வழிமறித்து மிரட்டியவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியில் இளம் பெண்கள் சென்ற காரை, திமுக கொடி பொருத்திய காரில் இளைஞர்கள் துரத்திச் சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில், விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.

சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி கானத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், கடந்த 25 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் தங்களது காரில் நாங்கள் 4 பேர் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக 2 கார்களில் வந்த ஏழு, எட்டு நபர்கள் எங்களை வழிமறித்தனர்.
இதனால் அச்சமடைந்து காரை நிறுத்தாமல் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தோம். அப்போது கானத்தூர் பகுதியில் இரண்டு கார்களில் வந்த நபர்கள் எங்களை துரத்தி வந்து வழிமறித்து, எங்கள் காரை ஏன் இடித்து விட்டு நிற்காமல் செல்கிறீர்கள் என பிரச்சனை செய்தனர்.
மேலும், எங்கள் காரை நீங்கள் இடித்து விட்டு காரை நிறுத்தாமல் சென்றதால் உங்களை துரத்தி வந்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என வந்ததாக தெரிவித்தனர். ஆனால் நாங்கள் அதுபோன்று காரை இடிக்கவில்லை என புகாரில் குறிப்பிட்டு இருந்தனர்.
இதையடுத்து பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கானத்தூர் போலீசார் 126(2) வழிமறித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 324(2) பொது சொத்துக்கு சேதத்தை ஏற்படுத்துதல், 351(2) மிரட்டல் மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, பெண்களை காரில் துரத்திச் சென்ற ஆண் நபர்களை பிடிக்க கானத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகளை அமைத்திருப்பதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை வேறொரு காரில் சென்ற இளைஞர்கள் துரத்திய விவகாரம் தொடர்பாக பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மேலும் 1 தனிப்படை அமைத்து இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications