பத்திரப் பதிவு செய்ய போறீங்களா?.. நவம்பர் 14, 15 முக்கியம் நோட் பண்ணுங்க.. அரசின் சூப்பர் அறிவிப்பு
சென்னை: சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு அதிகமான ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதற்காக வரும் என்பதால் நவம்பர் 14, 15 ஆகிய சுபமுகூர்த்த தினங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
எந்தவொரு சுபகாரியங்களானாலும் அதனை நல்ல நாட்களில் செய்வது வழக்கம். வீடு, மனை வங்குவது, அலுவலகம் தொடங்குவது, பணியில் சேருவது, வாகனங்கள் வாங்குவது, திருமணம் என அனைத்து நல்ல காரியங்களையும் சுபமுகூர்த்த தினங்களில் தொடங்க பொதுமக்கள் விரும்புகின்றனர். குறிப்பாக, வீடு, நிலம் உள்ளிட்டவை சுப முகூர்த்த தினங்களில் அதிக அளவில் பதிவு செய்யப்படும்.

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வகையில், நவம்பர் 14, 15 ஆகிய சுபமுகூர்த்த தினங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் விநியோகிக்கப்படவுள்ளதாக தமிழக அரசு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத் துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத் துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம், தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித் துணை ஆட்சியர்கள் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பதிவுத் துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) வருவாய் ரூ. 10,511 கோடி. நிகழும் 2024-2025 நிதி ஆண்டில் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) வருவாய் ரூ. 11,733 கோடி. கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டின் அக்டோபர் மாதம் வரை கூடுதலாக ரூ. 1,222 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான வருகின்ற நவம்பர் 14, 15 (வியாழன், வெள்ளி) ஆகிய தினங்களில் ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களும், ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டத்தில் அமைச்சர் பதிவு செய்த ஆவணங்களை அதே நாளிலே திருப்பி ஒப்படைத்தல் (களப் பணி மேற்கொள்ள வேண்டிய ஆவணங்களை தவிர்த்து), ஆவணங்கள் பதிவு செய்தவுடன் தன்னிச்சையாக இணையவழி பட்டா மாற்றம் செய்வதை தெரிவு செய்தல், வில்லங்கச்சான்று மற்றும் சான்றிடப்பட்ட நகல்கள் இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் உள்நுழைவிற்கே இணையதளம் வழி அனுப்பிவைத்தல் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.
அதேபோல, நிலுவை ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த விவரங்கள், தணிக்கை பிரிவு அலுவலர்களின் பணிகள், முக்கிய பதிவேடுகளை பராமரித்து கண்காணித்தல், உள்ளிட்ட பணிகளின் விவரங்களை கேட்டறிந்து, அனைத்து பணிகளையும் தொய்வில்லாமல் உடனுக்குடன் முடிக்குமாறு அறிவுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications