Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விலகினார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார்.. இணை பொதுச்செயலாளர் பதவியும் ராஜினாமா! என்டிஏவில் சலசலப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதவ் அர்ஜுன் மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் ஐஜேகே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் இந்திய ஜனநாயகக் கட்சியில் இணை பொதுச் செயலாளராகப் பணியாற்றி வந்த நிலையில், அந்தப் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். சில கசப்பான அனுபவங்கள் காரணமாகக் கட்சியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஐஜேகே கட்சியில் இணை பொதுச் செயலாளராக இருந்து வருபவர் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின். இவர் கடந்த 14 ஆண்டுகளாகவே ஐஜேகே கட்சியில் தான் இருக்கிறார். இவரது மருமகன் தான் ஆதவ் அர்ஜுனா. அவர் விசிக, தவெக எனச் சென்ற போதிலும் லீமா மார்டின் ஐஜேகே கட்சியிலேயே இருந்து வந்தார்.

Adhav Arjuna mother-in-law Lima Rose Martin has announced her resignation from the IJK party

லீமா ரோஸ் மார்ட்டின்

இதற்கிடையே அவர் ஐஜேகே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். லீமா ரோஸ் மார்ட்டின் சமீபத்தில் தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்திருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் தனது இணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமின்றி, கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அறிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று நான் எடுத்திருக்கும் ஒரு முக்கிய முடிவை அனைவரிடமும் அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். 2012 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை ஏறக்குறைய 14 ஆண்டு காலமாக இந்திய ஜனநாயக கட்சியில் பெரும் அர்ப்பணிப்போடு பயணித்து வந்திருக்கிறேன். 2012ல் துணைப் பொதுச் செயலாளர் ஆகவும், 2019ஆம் ஆண்டு முதல் இணைப் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன். இவ்வாறு முக்கிய பதவிகள் வகித்தபோதிலும் மேம்போக்காக அல்லாமல் களத்தில் இறங்கி கட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு இருக்கிறேன்.

நம் சமூகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் வலிமையாக குரல் கொடுத்துள்ளேன். சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளேன். எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கட்சியின் வளர்ச்சிக்காக எனது முழு உழைப்பையும், பங்களிப்பையும் வழங்கி தமிழ்நாடு முழுவதும் பயணித்துள்ளேன்.

மாவட்ட நிர்வாகிகள்

எனது மேற்பார்வையில் இந்திய ஜனநாயக கட்சியை கட்டமைப்பு ரீதியாக தமிழ்நாடு முழுவதும் வலுப்படுத்தி இருக்கிறேன். கோவை மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒன்றிய அளவிலும், கிளை அளவிலும் பலநூறு நிர்வாகிகளை நியமித்து கட்சியை வளர்த்திருக்கிறேன். அதேபோன்று மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் ஒன்றிய அளவிலும் கிளை அளவிலும் பலநூறு நிர்வாகிகளை நியமித்தது மட்டுமல்லாமல், தமிழ்நாடு மட்டுமின்றி அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களிலும் எனது தலைமையில் பல்லாயிரக்கணக்கான புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்துள்ளேன்.

நான் வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல, மார்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் என்பதையும் நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறேன். மேலும் மார்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் தாளாளராக பொறுப்பு வகிக்கும் நான் ஆண்டு தோறும் பல நூறு மருத்துவர்கள் உருவாக காரணமாக இருந்து வருகிறேன். இப்படி பல அலுவல் பணி மத்தியில் IJK சொந்தங்களின் இல்ல நிகழ்ச்சிகள் என அனைத்திலும் தவறாமல் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த வகையில் தமிழ்நாட்டில் நான் செல்லாத கிராமமே இல்லாத அளவில் அனைத்து இடங்களுக்கும் பயணித்திருக்கிறேன்.

பிரச்சாரம்

இது மட்டுமல்லாமல் தேர்தல் காலங்களின் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் IJK வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு இருக்கிறேன். அந்த வகையில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக ஒரே நாளில் 67 கிராமங்களுக்கு சென்று பரப்புரையில் ஈடுபட்டது எனது தனிப்பட்ட சாதனையாக நான் கருதுகிறேன். இவ்வாறு நேரம் காலம் பார்க்காமல் நான் உழைத்த கட்சி என் உழைப்பை அங்கீகரிக்கவில்லை என்பதும் சமீப காலமாக எனது உழைப்பை உதாசீனப்படுத்தியதும் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோன்று பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும், பொதுவாழ்வில் துணிச்சலோடும் தைரியத்துடனும் செயல்பட வேண்டும் என்று நான் செல்லும் இடம் எங்கிலும் சந்திக்கும் பெண்களை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறேன். இதுபோன்ற சூழலில் இக்கட்சி ஒரு பெண்ணின் உழைப்புக்கேற்ற அங்கீகாரத்தை வழங்காதது பெரும் ஏமாற்றமே. கட்சியின் தொண்டர்களான, நமது சமூக சொந்தங்களை விட்டு பிரிய மனமில்லாமல் என்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி 8 மாத காலம் காத்திருந்தேன்.

விலகல்

கட்சித் தலைமையில் இருந்து எந்த ஒரு முறையான பதில் வராத காரணத்தினாலும், சில சமீபகால கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலும் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுக்க நான் தள்ளப்பட்டுள்ளேன். இந்த முடிவினை கனத்த இதயத்தோடு உங்களுக்கு அறிவிக்கிறேன். இத்தனை ஆண்டுகள் எனது கட்சிப் பணிக்கு உறுதுணையாக இருந்த நிர்வாகிகள், தொண்டர்கள், நமது சமூக சொந்தங்கள் என அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகினாலும் எனது அரசியல் பயணமும், மக்கள் சேவையும் தொடரும் என தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+