அது என்ன.. இந்த "ஒத்த" தொகுதியை.. மொத்த கட்சிகளும் குறி வைக்குது.. சூடு பறக்கும் தேர்தல்..!
திருத்தணி சட்டசபை தொகுதிக்கு அதிமுக கூட்டணிக்குள் போட்டா போட்டி நடக்கிறது
சென்னை: இருக்கிற மற்ற தொகுதிகளை எல்லாம் விட்டுவிட்டு, ஒரே ஒரு தொகுதியை மட்டும் பிரதான கட்சிகள் குறி வைத்து வருவது பலரின் புருவங்களை உயர்த்தி வருகிறது... என்னவா இருக்கும்?!
தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. சீட் ஒதுக்கீடு, தொகுதி நிலவரங்கள் குறித்த வெளிப்படையான பேச்சுவார்த்தையை கட்சிகள் இன்னும் நடத்தவில்லை.. அதனால் கூட்டணியும் உறுதியாகவில்லை.
ஆனால் இந்த முறை திமுகவும் சரி, அதிமுகவும் சரி, ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருக்கின்றன.,. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை அள்ளி தந்து விடாமல், அதேசமயம், முக்கிய தொகுதிகளை தங்கள் கைகளில் வைத்து கொள்ள வேண்டும் என்பதே அது.
தொகுதிகள்
வழக்கமாக, தேர்தலில் போட்டியிட தாங்கள் விரும்பும் தொகுதிகளை தலைமையிடம் வேட்பாளர்கள் கேட்பது இயல்பான ஒன்றுதான்.. இதற்கு காரணம், தங்கள் செல்வாக்கு என்ன என்பது தெரிந்துதான் அந்த தொகுதியை தருமாறு வலியுறுத்துவார்கள்.. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், கூட்டணி தலைமையோ, கட்சி தலைமையோ வேட்பாளர்கள் கேட்கும் அந்த குறிப்பிட்ட தொகுதியையும் ஒதுக்குவார்கள். இந்த முறை, அப்படி எல்லாருமே குறி வைத்த தொகுதி மயிலாப்பூர் ஆகும்.. இந்த செய்தி கடந்த மாதமே கசிந்து வந்தது..
மயிலாப்பூர்
தென்சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிதான் இந்த மயிலாப்பூர்.. திமுகவும் சரி, அதிமுகவும் சரி, 2 கட்சிகளுமே இங்கு வலுவானவைதான்.. இங்கு மட்டும் 2.69 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.. பெரும்பாலும் பிராமண சமூகத்தினர் அதிகம்.. இந்த தொகுதிக்கு இப்போது திமுக, அதிமுக, கமல் என போட்டி போட்டுக் கொண்டு குறி வைத்து வருகின்றனர். எல்லாருமே இதே தொகுதியை குறி வைக்க சமுதாய வாக்குகள்தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை.. கடைசியில் யாருக்குதான் மயிலை கிடைக்க போகிறது என்பது சஸ்பென்ஸ்தான்.
திருத்தணி
அதுபோலவே, இப்போதும் இன்னொரு தொகுதிக்கு அதிமுக கூட்டணியும் குறி வைத்துள்ளதாம்.. அது திருத்தணி சட்டசபை தொகுதியாகும்..! கூட்டணியில இருக்கிற பாமக, தேமுதிக, பாஜக என 3 கட்சிகளுமே திருத்தணியை ஒதுக்கி தரும்படி வலியுறுத்தி வருகிறதாம்.. இதுல அதிக அளவுக்கு அழுத்தம் தருவது பாமகதானாம்.. அதிலும் திருத்தணி தொகுதியில் எங்களுக்குதான் சீட் என்று, இப்போதே இப்பவே தேர்தல் அலுவலகத்திற்கு இடம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.
தேமுதிக
பாமக இப்படி செய்ததும், அடுத்த செகண்டே தேமுதிகவும் களத்தில் குதித்துள்ளது.. திருத்தணி தொகுதியை கேட்டு வாங்கி வெற்றி பெறுவது என்று முடிவெடுத்துள்ளாராம்.. ஆனால், திருத்தணிக்கு வேல் எடுத்துட்டு போய் திரும்பி பார்க்க வைத்தது தாங்கள்தான் என்று பாஜக கிளம்பி உள்ளது..
வாக்குகள்
எப்போதுமே இந்துக்கள் ஓட்டு பிரதானமானவையாக பார்க்கப்படுகிறது.. அதனால்தான் எல்லா கட்சிகளுமே கையில் வேல் எடுத்துள்ளனர்.. இப்போது திருத்தணிக்கு குறி வைத்து, அதன்மூலம் வாக்குகளை லட்டுபோல அள்ளவே இக்கட்சிகள் குறி வைத்துள்ளதாக தெரிகிறது.. கடைசியில், திருத்தணி முருகனின் அருள் யாருக்கு கிடைக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்..!