ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு.. முதல்வர் சொல்லித்தான் அவர் இப்படி பேசுகிறாரா? ஜெயக்குமார் காட்டம்!
சூடு சுரணை உள்ளவர்கள் விமர்சிப்பார்கள். ஆனால், அவர்களுக்கு அது இருப்பதாகவே தெரியவில்லை என்று ஜெயக்குமார் தாக்கிப் பேசியுள்ளார்.
சென்னை : திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு என்றும் முதல்வர் ஸ்டாலின் சொல்லித்தான் அவர் இப்படி பேசுகிறாரா என்று நினைக்கத் தோன்றுகிறது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
காமராஜரை திமுக எம்.பி ஆ.ராசா அவதூறு செய்துவிட்டதாகக் கூறி நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.
பின்னர் பேசிய ஜெயக்குமார், சிறப்பான ஆட்சியை கொடுத்த காமராஜரை கொச்சைப்படுத்துவது சரியா? முதலமைச்சர் சொல்லித்தான் ஆ.ராசா இப்படி பேசுகிறாரா என்பது தெரியவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சி இதனை விமர்சிக்காதது குறித்துப் பேசிய ஜெயக்குமார், சூடு சுரணை உள்ளவர்கள் விமர்சிப்பார்கள். ஆனால், அவர்களுக்கு அது இருப்பதாகவே தெரியவில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

ஆ.ராசாவுக்கு கண்டனம்
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான காமராஜர் பற்றி தவறான கருத்துகளை தெரிவித்ததாக திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

ஜெயக்குமார் விமர்சனம்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு. ஊழலில் திளைத்த ராசா மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகிறார். அதை ஊக்கப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அரசியலில் திமுகவில் இருந்து ஒதுக்கப்பட்ட காரணத்தால் தன்னுடைய இருப்பை காட்டவேண்டும் என்பதற்காக அவ்வப்போது மதங்களையும், சாதிகளையும் இழிவுபடுத்துவது, ஆ.ராசாவுக்கு கைவந்த கலை.

முதல்வர் சொல்லித்தான் செய்கிறாரா
வாய்த்துடுக்கு இவ்வளவு இருக்கும்போது, இந்த செயல் குறித்து தெரிந்தும் தெரியாமல் ஸ்டாலின் இருக்கிறார். தூங்குபவரை எழுப்பிவிடலாம், ஆனால் தூங்குபவர் போல நடிப்பவரை எழுப்ப முடியாது. இதுபோன்ற செயல்களை ஸ்டாலின் சொல்லித்தான் செய்கிறாரா என்று தெரியவில்லை. பெருந்தலைவரை சொச்கைப்படுத்தும் வகையிலே அவர் வார்த்தைகளை உபயோகித்த நிலையில் ராசாவை ஒரு வார்த்தைகூட முதல்வர் கண்டிக்காதது என்பது, உண்மையிலேயே அவருடைய ஆசியோடுதான் ஆ.ராசா சொல்கிறாரா என்று அனைவரும் நினைக்கும் சூழல் உள்ளது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து
பொதுவாகவே திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு மக்களுக்கான பணிகளைக் கவனிக்காமல், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தியும் மற்றும் பல்வேறு சமுதாய மக்களை இழிவு படுத்தும் செயல்களையும் செய்துவருகிறது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக பெருந்தலைவரைக் கொச்சைப்படுத்தி உள்ளார்கள்." என விமர்சித்தார்.

சர்வாதிகாரம்
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், "நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னார். எதிர்க்கட்சிகளிடம் தான் தன்னுடைய சர்வாதிகாரத்தை அவர் காட்டி வருகிறார். தனது கட்சிக்காரர்களிடம் அதைக் காட்டுவதே இல்லை. ஆட்சியை விமர்சனம் செய்தால் வழக்குகள் போடுவது, சிறையில் தள்ளுவது. இதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார்.

கொச்சைப்படுத்துவது சரியா?
பெருந்தலைவர் காமராஜர் விடுதலைப் போராட்ட வீரர். சிறப்பான ஆட்சியை கொடுத்தவர். அவரை கொச்சைப்படுத்துவது சரியா? இதையெல்லாம் பார்க்கும்போது முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லித்தான் ஆ.ராசா இப்படி பேசுகிறாரா என்கிற சந்தேகம் எழுகிறது. இதனை எல்லாம் கண்டும் காணாமலும், வேடிக்கை பார்த்துக்கொண்டு இவற்றை எல்லாம் ஊக்கப்படுத்துகின்ற வகையில்தான் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார்.

மறக்க மாட்டார்கள்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை மதிக்காத ஒரு அரசாக இந்த திமுக அரசு இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன் திமுக அளித்த வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, நகைக்கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதிகள் எல்லாம் திமுக அரசு மறந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அவற்றை மறக்காமல் எதிர்வரும் தேர்தல்களில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்." எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஜால்ரா
காமராஜர் குறித்து ஆ.ராசா பேசியது குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சி ஜால்ரா, பக்கவாத்தியமாக திமுகவிற்கு உள்ளது. சூடு சுரணை உள்ளவர்கள் பேசுவார்கள். அவர்களுக்கு அது இருப்பதே தெரியவில்லை. திமுக ஆட்சியின் அவல நிலையை மக்கள் உணர்ந்துள்ளனர். அதனை மனதில் வைத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் ஓட்டுப் போடுவார்கள் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications