தலைமைப் பதவியா? நான் மூன்றாந்தர அரசியல்வாதி இல்லை.. ‘ஆடியோ’வால் பொங்கித்தீர்த்த கே.பி.முனுசாமி!
சென்னை : துரோகம் செய்து தலைமையைப் பிடிக்கும் மூன்றாந்தர அரசியல்வாதியாக எப்போதுமே இருந்ததில்லை, இருக்கவும் மாட்டேன் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை ஏற்றுக்கொண்டது போல இறுதிவரை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசமாகச் செயல்படுவேன் என முனுசாமி தெரிவித்துள்ளார்.
கே.பி.முனுசாமி பற்றி முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் கே.பி.முனுசாமி.

பகீர் கிளப்பிய ஆடியோ
கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கோலப்பனிடம், அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பற்றிய பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆடியோ தான் பேசியது அல்ல என மறுத்துள்ளார் பொன்னையன்.

தலைமைக்கு குறிவைக்கும் முனுசாமி
கே.பி.முனிசாமியும் ஸ்டாலினைத் திட்டுவதை நிறுத்திவிட்டார். பெட்ரோல் பங்க் வாங்கியது எல்லாம் சாதாரணம். அவர், துரைமுருகனை பிடித்து குவாரி உரிமம் வாங்கியுள்ளார். குவாரி எக்ஸ்போர்ட் மூலம் மாதம் 2 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். பணத்தை பாதுகாக்க இப்படி ஆடுகிறார். அவர் ஸ்டாலின் தயவுக்காக, தி.மு.கவை திட்டுவதில்லை. நாளை முனுசாமியே ஒற்றைத் தலைமைக்கு வரலாம் என்றும் கணக்கு போடுகிறார். யாரும் கட்சிக்கு விசுவாசமாக இல்லை என பொன்னையன் பேசுவதாக அந்த ஆடியோவில் இருந்தது.

விசுவாசமான தொண்டன்
இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, "பொன்னையன், அதிமுகவின் மூத்த தலைவர். அவர் இதுபோன்ற கருத்துகளை நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை ஏற்றுக்கொண்டது போல இறுதிவரை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்றுக்கொண்டு விசுவாசமாகச் செயல்படும் தொண்டர்களில் நானும் ஒருவனாக இருப்பேன்.

மூன்றாந்தர அரசியல்வாதி இல்லை
அவர்கள் சொல்வதுபோல தலைமையைப் பிடிக்கும் மூன்றாந்தர அரசியல்வாதியாக எப்போதுமே இருந்ததில்லை. இருக்கவும் மாட்டேன். என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். நான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு 50 ஆண்டு காலமாக விசுவாசமாக இருந்த காரணத்தால் தான் இன்று மக்கள் மத்தியில் தெரியும் அளவுக்கு வந்திருக்கிறேன்.

என்னைவிட துரோகி இருக்க முடியாது
இவ்வளவு பெரிய வாய்ப்புகளை தலைவர்கள் எனக்குக் கொடுக்கிறபொது, அந்தத் தலைவர்களுக்கு விசுவாசமாக செயல்படவில்லை என்றால் என்னை விட பெரிய துரோகி யாரும் இருக்க முடியாது. நிச்சயமாக இறுதி மூச்சு வரை இந்த கட்சிக்காகவும், தலைமைக்காகவும் உழைப்பேன்.

அவமானங்களை உரமாக்குவேன்
வருகின்ற அவமானங்கள் எதுவாக இருந்தாலும், அந்த அவமானங்களை ஏற்றுக்கொண்டு, அந்த அவமானங்களே இயக்கம் வளர்வதற்கு உரமாக இருக்கிறது என்றால், அந்த அவமானங்களையே உரமாக மாற்றி நான் கொடுப்பேன் என்று உறுதியாகச் சொல்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications