சுடச்சுட இட்லி, பொங்கல், மசால் வடை! 5,000 பேருக்கு காலை, மதியம் சாப்பாடு! அதிமுக பொதுக்குழு ருசிகரம்
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் அதில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு காலை, மதியம் என இரண்டு வேளைக்கும் அறுசுவை உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மஹாலில் இன்று நடைபெறுகிறது. ஜெயலலிதா காலத்தில் இருந்தே இந்த மண்டபத்தில் தான் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வருகிறது. இதனை அதிமுக தலைமை செண்டிமெண்டாகவும் பார்க்கிறது. இதனிடையே அதிகாலை முதலே வெளியூர் பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்திற்கு வருகை தர ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு டீ, காஃபி தயார் செய்து கேன்களில் வைக்கப்பட்டுவிட்டன.

அதேபோல் காலை சிற்றூண்டியாக இட்லி, பொங்கல், மசால் வடை, சாம்பார், சட்னி என பல மெனுவை அலங்கரித்தன. கடந்தமுறை மதுரை மாநாட்டில் வழங்கப்பட்ட புளியோதரை கட்சிக்கு கேலி கிண்டலை உருவாக்கிக் கொடுத்ததால், இந்த முறை அது போல் எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி மிக கவனமாக இருந்தார். இதனால் தான் சாப்பாடு விஷயத்தில் அவரே நேரடியாக தலையிட்டு பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் வயிராற சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக மெனுவில் சில கூடுதல் பண்டங்களையும் சேர்க்கச் சொல்லியிருக்கிறார்.
மதுரை அதிமுக மாநாட்டில் சமைத்த டீமுக்கு பதிலாக வேறொரு சமையல் டீமை களமிறக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனிடையே பொதுக்குழுவுக்கான செலவை கட்சியே ஏற்றுள்ளதால், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீணிவாசன் நேற்று முதல் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திலேயே முகாமிட்டு வரவு செலவுகளை கவனித்துக்கொண்டார்.

தேர்தல் ஆணைய சட்டத்திட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் என்பது கட்டாயம். இதனால் தான் இன்றைய தினம் அதிமுக பொதுக்குழு நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications