அதிமுக பொதுக்குழுவுக்கு முட்டுக்கட்டை போடும் கே.சி.பழனிசாமி...!
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டப்படாததற்கு கே.சி.பழனிசாமி தொடர்ந்துள்ள வழக்குத் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
அரசியல்கட்சிகளை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒருமுறையாவது பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஜெயலலிதா இருந்தவரை அதிமுக பொதுக்குழு மதிய உணவோடு திருவிழாவை போல் நடைபெறும்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ஆண்டுக்கு ஒருமுறை அந்தக் கூட்டத்தை முறையாக நடத்தி வந்தார். அவர் கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி காலமானதை அடுத்து அதே ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, அதில்தான் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2017-ல்பொதுக்குழு
அதற்கு பிறகு நடந்த அரசியல் மாற்றங்கள் அனைவரும் அறிந்தது. 2017 பிப்ரவரி மாதம் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் 2017 செப்டம்பரில் மீண்டும் இணைந்தார். அப்போது ஒரு பொதுகுழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.க்கு கட்சி விதிகளை திருத்தி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தரப்பட்டது. 2017 செப்டம்பர் 12-ம் தேதி நடந்தது தான் அதிமுகவில் கடைசியாக நடைபெற்ற பொதுக்குழு.

முட்டுக்கட்டை
அதற்கு பிறகு 2018-ல் நடத்த வேண்டிய பொதுக்குழுவை அதிமுக தலைமை நடத்தவில்லை. இந்தாண்டும் பொதுக்குழுவை நடத்த முடியாத நிலைதான் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.க்கு ஏற்பட்டுள்ளது. கட்சி விதிகளை திருத்தி அடிப்படை உறுப்பினர்களின் உரிமைகளை பறித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொண்டுவரப்பட்டதாக கூறி முன்னாள் அதிமுக எம்.பி.கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

2020-ல் விசாரணை
அந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனிடையே அந்த வழக்கு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தான் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

முயற்சி
இப்படி அதிமுக தலைமை பொதுக்குழுவை கூட்டமுடியாதவாறு கே.சி.பழனிசாமி வழக்குகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவருவதால், அவரிடம் சமாதானம் பேசும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் அதிமுக சீனியர் நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications