அதிமுக ஐ.டி.விங்கில் பொறுப்புகள்... ஆன்லைன் மூலம் திறனாய்வு தேர்வு... அதற்கு பிறகே பொறுப்பு
சென்னை: அதிமுக ஐ.டி.விங்கில் பொறுப்புக்கு வர விரும்புபவர்களுக்கு ஆன்லைன் மூலம் திறனாய்வு தேர்வு நடத்தப்படவுள்ளது.
இந்திய அளவில் அரசியல் கட்சி ஒன்றில் திறனாய்வு தேர்வு அடிப்படையில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சிபாரிசுகளுக்கு பதவி கொடுக்கவில்லை என மனமாச்சரியங்கள் எழும் என்பதால் புதுமையான முறையில் நிர்வாகிகளை தேர்வு செய்கின்றனர் அதிமுக ஐ.டி.விங் மாநில நிர்வாகிகள்
மாவட்டத்திற்கு 2 குழு அமைப்பு.. இனி உடனுக்குடன் இ பாஸ் வழங்கப்படும்.. முதல்வர் அறிவிப்பு
தகவல் தொழில்நுட்ப அணி
தமிழகத்தில் திமுக, பாஜக, ஆகிய இரண்டு கட்சிகளும் வலைதளப் போர் நடத்தி வருகின்றன. இரண்டு கட்சிகளில் உள்ள ஐ.டி.விங் நிர்வாகிகளும் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் அதிரடியாக கருத்து யுத்தங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவிலும் ஐ.டி.விங்கை வலிமைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சிபாரிசுக்கு இடமில்லை
அந்த வகையில் அதிமுக ஐ.டி.விங்கில் மாவட்டம், நகரம், பகுதி, வட்டம், ஒன்றியம், பேரூர், கிளை வரையிலான பொறுப்புகளுக்கு சிபாரிசுகளுக்கு இடமளிக்காமல் திறனாய்வு தேர்வு, விசுவாசம், ஆகியவைகளின் அடிப்படையில் நியமனங்கள் நடைபெறவுள்ளன. அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிக்காக உள்ள பிரத்யேக இணையத்தளத்தில் இதற்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
32 கேள்விகள்
நிர்வாகிகள் நியமனத்தை இரண்டு கட்டங்களாக பிரித்துள்ள அதிமுக ஐ.டி.விங், முதற்கட்டத்தில் பொறுப்பு கேட்டு விண்ணப்பித்தவர்கள் பின்னணி, பணி, வயது, கடந்த கால சமூக வலைதள செயல்பாடுகள் பற்றி ஆராய உள்ளது. இரண்டாம் கட்டமாக ஆன்லைன் மூலம் திறனாய்வு தேர்வு நடத்தி அதன் மூலம் இறுதி பட்டியல் தயாரிக்க உள்ளது. இந்த தேர்வு மொத்தம் 20 நிமிடங்கள் நடைபெறவுள்ளது.
புதுமை முயற்சி
இந்தியாவிலேயே இப்படி ஒரு தேர்வு வைத்து அதன் மூலம் நிர்வாகிகள் நியமிக்கப்படுவது அதிமுக ஐடி விங்கில் தான் முதல் முறை என்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே திறனாய்வு தேர்வில் அதிமுகவின் சாதனைகள், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் மக்கள் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேள்விகள் கேட்கப்படவுள்ளன.