"முளைத்து மூன்று இலை விடாதவர்கள்.." விஜய் பற்றி கேட்டவுடன் டென்ஷனான ஜெயக்குமார்.. ஆவேச பேச்சு
சென்னை: அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார், தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். ஊர்க் குருவி எவ்வளவு உயர உயரப் பறந்தாலும் பருந்தாகாது என்ற அவர், எம்ஜிஆர் முகமூடியைப் போட்டுக் கொண்டு வந்தாலும் அதிமுக வாக்குகளைப் பெற முடியாது எனச் சாடினார்.
அதிமுக சார்பில் சென்னையில் கிறிஸ்துமஸ் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் திமுகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையினர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஜெயக்குமார்
இந்த நிகழ்ச்சியில் அதிமுக மூத்த தலைவரான ஜெயக்குமாரும் கலந்து கொண்டார். அவரிடம் இன்று விஜய்யின் ஈரோடு பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஈரோட்டில் விஜய் பேசிய போது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயர்களைப் பயன்படுத்தி இருந்தார். மேலும், அதிமுக தலைவர்கள் குறிப்பிட்டது போல திமுகவைத் தீய சக்தி எனக் குறிப்பிட்ட விஜய், அந்தத் தீய சக்தியை வீழ்த்தவே தூய சக்தியாக தவெக வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மாஸ்க் போட்டுவிட்டு வருகிறார்
அது குறித்த கேள்விக்கு ஜெயக்குமார், "பொதுவாக ஒரு கட்சிக்கு எனத் தனித்தன்மை இருக்க வேண்டும். ஆனால், தனித்தன்மை இல்லாதவர்கள் இப்போது பேசுகிறார்கள்.. எம்ஜிஆர் என்ற முகமூடியைப் போட்டு வந்தால் தான் மக்களைச் சந்திக்க முடிகிறது.. முகமூடி போட்டு வந்தால் தான் வாக்குகள் கிடைக்கும் என்றே நினைக்கிறார் விஜய். அப்படி என்றால் அவர்களுக்குத் தனித்தன்மை இல்லாமல் போய்விட்டது என்று அர்த்தம்.
ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எம்ஜிஆர் முகமூடியைப் போட்டுக் கொண்டு வந்தாலும் சரி, ஜெயலலிதா முகமூடியை முகமூடியைப் போட்டுக் கொண்டு வந்தாலும் சரி, அண்ணா முகமூடியைப் போட்டுக் கொண்டு வந்தாலும் சரி.. அதிமுகவுக்கு வாக்களித்த கைகள் வேறு எந்த கைகளுக்கும் வாக்களிக்காது. வரலாற்றைப் பார்த்தாலே இது நமக்குத் தெளிவாகப் புரியும். அவர்களுக்கு என்று ஒரு தனித்தன்மை இல்லாததால் எங்கள் தலைவர்களின் முகமூடியைப் போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
முளைத்து மூணு இலை விடாதவர்கள்
விஜய் பொத்தாம் பொதுவாகவே எல்லாம் பேசி இருக்கிறார். நானும் கூட அப்படிப் பேச முடியும். ஊர்க் குருவி எவ்வளவு உயர உயரப் பறந்தாலும் பருந்தாகாது. களத்தில் இல்லை என அவர் அதிமுகவை குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால், மறைமுகமாக அவர் எங்களைச் சொல்லி இருந்தால் அதற்கு நான் ஒன்றைச் சொல்கிறேன்.. முளைத்து மூன்று இலை விடாதவர்கள், ஆலமரமாக இருக்கும் அதிமுக இயக்கத்தை பற்றிப் பேசக்கூடாது. எத்தனையோ பேருக்கு அதிமுக நிழல் கொடுத்துள்ளது. அரசியல் அடிப்படைகளைப் படித்துவிட்டு வாருங்கள்" என்றார்.
ஸ்டாலினுக்கு பதிலடி
அதிமுக எதிர்க்கட்சியாக இல்லாமல் எதிரிக் கட்சியாக செயல்படுவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தது குறித்த கேள்விக்கு ஜெயக்குமார், "இன்றைய முதல்வர் அதிமுக ஆட்சியில் என்னவெல்லாம் பேசினார்.. என்னவெல்லாம் செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். பனியன் நிறுவன விளம்பரம் போலச் சட்டையை எல்லாம் கிழித்துக் கொண்டு வந்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோது மானம் இருக்கிறதா ஈனம் இருக்கிறதா என்று பேசி எதிரி கட்சியாகச் செயல்பட்டதே திமுக தான். அது அவர்கள் மனதில் இருக்கும். இன்று ஆளும் கட்சியாக இருக்கும் திமுக, நாளை உதிரி கட்சியாக போய்விடும்" என்றார்.












Click it and Unblock the Notifications