அதிமுக உட்கட்சி தேர்தல்; எதிர்த்து நிற்க ஆளே இல்லை: ஓபிஎஸ்-இபிஎஸ் நாளை மனுதாக்கல்
அதிமுக உட்கட்சித்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. காலையில் வேட்புமனு தாக்கல் செய்யவந்த அதிமுக தொண்டர் தாக்கப்பட்டார். மாலை 3 மணிவரை ஒருவரும் வேட்புமனுதாக்கல் செய்ய வரவில்லை. நாளை ஓபிஎஸ்-இபிஎஸ் மனுதாக்கல் செய்கின்றனர்.

ஜெயலலிதா மறைவு
அதிமுக ஜெயலலிதா மறைவுக்குப்பின் பல பிரச்சினைகளை சந்தித்தது. சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறைக்குச் சென்றார். அதன் பின்னர் ஓபிஎஸ் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டார். சசிகலா, டிடிவி உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். கட்சி விதிகள் திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டுக்குழு அமைக்கப்பட்டது. ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமைக்கு வந்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படலாம் என விதி திருத்தப்பட்டது.

கட்சி விதிகளில் மாற்றம் வானளாவிய அதிகாரம் பெற்ற ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்
நேற்று முன் தினம் நடந்த செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகள் 20, 43, 45, ஆகியவை திருத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டது, கட்சியின் பொதுச் செயலாளர் போல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்து நேரடியாக கட்சித்தொண்டர்களால் ஒற்றை வாக்கில் தேர்வு என விதி திருத்தப்பட்டது.

உட்கட்சி தேர்தல் அறிவிப்பு
இந்நிலையில் கட்சியின் உட்கட்சி தேர்தல் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். டிச.7ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் குறித்த அறிவிப்பை அதிமுக வெளியிட்டது.
கட்சி விதி 30-ன் படி அதிமுக உட்கட்சித்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படவேண்டும் என்கிற அடிப்படையில் டிசம்பர் 7 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடக்கிறது. என அறிவிப்பு வெளியானது.

வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
இந்நிலையில் அதிமுக உட்கட்சித்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. வேட்புமனுதாக்கல் செய்ய ஒரு தொண்டரும் வரவில்லை. இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இரண்டுபேர் கூட்டாக வரவேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பதவிகளுக்கும் கூட்டாக வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும். அவர்களை கட்சி உறுப்பினர்கள் 10 பேர் முன் மொழிய வேண்டும்

அலுவலகம் வந்து அடிவாங்கிய கட்சித்தொண்டர்
தலைமையை எதிர்த்து யாரும் போட்டியிட வாய்ப்பில்லை என்பதால் காலையிலிருந்து பலரும் எதிர்ப்பார்த்தும் யாரும் வரவில்லை. இந்நிலையில் இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு கொடுக்க ஓட்டேரி அதிமுக தொண்டர் பிரசாத் சிங் என்பவர் வந்தார். அவர் உள்ளேச்சென்று வேட்புமனுவை கேட்டுள்ளார். அவருக்கு தகுதி இல்லை என்பதனால் மனு இல்லை என்று கூறியுள்ளனர்.

ஆவேச பேட்டி அடி-உதை
இதைத்தொடர்ந்து வெளியில் வந்த அவர் ஆவேசமாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க தயாரானார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டு தாக்கினர். பின்னர் அவர் வெளியேற்றப்பட்டார். கட்சியினர் சிலர் தலையிட்டு அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.

ஒருவர் வரவில்லை, எதிர்த்து நிற்க ஆளே இல்லை
அதன்பின்னர் தொண்டர்கள் கூட்டம் யாராவது வருகிறார்களா என காத்திருந்தது. ஊடகத்தினரும் காத்திருந்தனர், ஆனால் மாலை 3 மணி வரை யாரும் வரவில்லை. அதன் பின் வேட்புமனு நேரம் முடிந்தது. அதிமுகவில் ஒருவரும் தலைமையை எதிர்த்து போட்டியிட தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
நாளை ஓபிஎஸ்-இபிஎஸ் வேட்புமனு தாக்கல்
இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் நாளை காலை மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மனுத்தாக்கல் செய்ய வரும் நேரத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவருக்கும் வரவேற்பு கொடுக்கவும் தொண்டர்கள் தயாராகி வருகின்றன.

போட்டியில்லாமல் தேர்தல் இன்றி தேர்வு?
நாளையும் யாரும் எதிர்த்து போட்டியிடவில்லையென்றால் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நீதிமன்றமும் தடைவிதிக்க மறுத்த நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் தேர்வில் பிரச்சினை எதுவும் இல்லை என கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications