ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்புக்கு பாலம்? அதிமுக தலைமையுடன் சசிகலா சந்திப்பா? தமிழ்மகன் உசேன் சொன்ன பதில்!
சென்னை : சசிகலா அதிமுக தலைவர்களைச் சந்திக்க உள்ளதாக சொல்லிக்கொண்டு இருப்பது கேலிக்கூத்து எனவும், நிச்சயமாக அது நடைபெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை எனவும் ஈபிஎஸ் ஆதரவாளரான அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே 6 மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில், சசிகலாவும் தன் பங்குக்கு அவ்வப்போது புயலைக் கிளப்பி வருகிறார்.
அதிமுகவை இணைக்கும் வேலையில் ஈடுபடுவேன், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விரைவில் சந்தித்துப் பேசி கட்சியை இணைப்பேன் என்று தெரிவித்தார்.
அந்த 1 காரணம்.. கை கோர்க்கும் எடப்பாடி - ஓபிஎஸ் - சசிகலா.. அடுத்தடுத்து நடந்ததை கவனிச்சீங்களா? ஆஹா
சசிகலா சொன்ன வார்த்தை
திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால், அதிமுக ஒன்றுபட வேண்டும், அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். அதிமுகவை இணைக்கும் வேலையில் ஈடுபடுவேன். விரைவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன் என சசிகலா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். சசிகலாவின் இந்தக் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளார் ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன். சசிகலா அதிமுக தலைமையை சந்திக்க எந்த வாய்ப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்மகன் உசேன்
திருவண்ணாமலை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி அணி சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்மகன் உசேன், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். அது மக்கள் அனைவரும் அறிந்தது.
தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்
ஆனால் தற்போது பொய் வாக்குறுதிகளை கண்டு ஏமாந்து விட்டோமே என்றும், தி.மு.க அரசை எப்போது வீட்டிற்கு அனுப்புவது என்றும் மக்கள் ஏக்கத்தோடு உள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார். மேலும், மேலும், ஓபிஎஸ் பற்றிப் பேசுகையில், தலைமை கழகத்தை சூறையாடிவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது என்றால் கட்சி தொண்டர்கள் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது எனது கருத்து." எனத் தெரிவித்துள்ளார்.
கேலிக்கூத்து
மேலும், "ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமைக் கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அ.தி.மு.க ஈரோடு இடைத் தேர்தலில் வெற்றி வாகை சூடும். சசிகலா அ.தி.மு.க தலைமையை சந்திக்க உள்ளதாக கேலிக்கூத்தாக சொல்லி கொண்டு இருக்கிறார். நிச்சயமாக அது நடைபெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை." என அவர் தெரிவித்துள்ளார்.