“ஹேப்பி”.. கூட்டணியில் விலகுறீங்களா? ரொம்ப சந்தோசம்.. பாஜகவினரை வேவு பார்த்த அண்ணாமலை -அதிமுக சுளீர்
"சொந்த கட்சியினரையே கொச்சைப்படுத்தி மற்ற கட்சிகளிலும் இப்படி செய்யலாம் என்ற நிலைமை பாஜகவில் இந்த காலக்கட்டத்தில்தான் உருவானது.”
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வேன் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதற்கு அதிமுக தரப்பில் விளக்கமளித்து இருக்கிறது.
சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்களின் கூட்டம் மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அண்ணாமலை பேச்சு
இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியது தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மட்டுமின்றி தமிழ்நாடு அரசியலை உற்று நோக்கி வருபவர்களுக்கே பெரும் டுவிஸ்டாக அமைந்தது. அவர் பேசுகையில், "நாம் தனியாக இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க முடியும். பாஜகவை வளர்த்து எடுக்கவே நான் பாடுபட்டு வருகிறேன்.

சுதந்திரம் வேண்டும்
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால், என்னுடைய தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்து, சாதாரண தொண்டனாக கட்சியில் இருப்பேன். உரிய சுதந்திரத்தை எனக்கு அளிக்க வேண்டும். மேனேஜர் அல்ல. கட்சியின் மாநில தலைவர் என்று நான் சொன்னேன்.

ராஜினாமா செய்வேன்
என்னிடம் தமிழ்நாட்டில் பாஜகவை வெற்றிபெற வைக்கும் திட்டங்கள் இருக்கின்றன. நான் என்னுடைய பாணியில் செயல்பட முடியாதபோது பதவியில் இருந்து ராஜினாமா செய்து தொண்டனாக செயல்படுவேன்." என்று தெரிவித்து இருக்கிறார். அண்ணாமலையின் இந்த பேச்சால் அக்கட்சி நிர்வாகிகளே அதிருப்தி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆதி ராஜாராம்
இதுகுறித்து அதிமுக அமைப்பு செயலாளர் ஆதி ராஜாராமிடம் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் பதவியை ராஜினாமா செய்வதாக அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியது. "ரொம்ப சந்தோசம். எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. யார் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?

சொந்த கட்சியினரை வேவு பார்த்தவர்
ஒரு சுமூகமான நல்லிணக்கமாக அரசியல் கட்சிகள் இருந்த நிலையை மாற்றி வார் ரூம்.. அந்த கதை, இந்த கதை.. அவர்களின் சொந்த கட்சிக்காரர்களையே கொச்சைப்படுத்தி மற்ற கட்சிகளிலும் இப்படி செய்யலாம் என்ற நிலைமை பாஜகவில் இந்த காலக்கட்டத்தில்தான் உருவானது.

விடை கொடுக்கிறோம்
மற்ற கட்சிகளிலும் இது தொற்றிக்கொள்ளக் கூடாது. ஆகவே அவர் எடுக்கும் முடிவு மிகவும் நல்ல முடிவுதான். நாங்கள் பாசமுடன், அன்புடன் வரவேற்கிறோம். விடை கொடுக்கிறோம்." என்று கூறி இருக்கிறார். அதிமுக அமைப்பு செயலாளர் ஆதி ராஜாராமின் இந்த பேச்சுதான் ஒட்டுமொத்த கட்சித் தலைமையின் கருத்தாக இருக்கும் என்று பலர் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications