அதிமுகவில் ஜாதி அரசியலா? என் எண்ட்ரி ஆரம்பம்.. 3 ஆண்டுகளுக்குப் பின் திடீரென 'முழித்த' சசிகலா!
சென்னை: லோக்சபா தேர்தலில் அண்ணா திமுக தோல்வி அடைந்த நிலையில் அதிமுகவில் ஜாதி அரசியல் நடக்கிறது; அதிமுகவில் என் எண்ட்ரி ஆரம்பமாகிவிட்டது என 3 ஆண்டுகளுக்குப் பின் சசிகலா திடீரென பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. ஆனால் இது அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்தும் கேள்விகள் எழுகின்றன.
2016-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார். அப்போது இடைக்கால முதல்வரானார் ஓபிஎஸ். பின்னர் அதிமுகவில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியில் சசிகலா அமர வைக்கப்பட்டார். அதே வேகத்தில் முதல்வராகவும் சசிகலா முயற்சித்தார்.

ஓபிஎஸ் தர்ம யுத்தம்: ஆனால் அதிமுகவில் ஓபிஎஸ் (ஓ.பன்னீர்செல்வம்) தர்மயுத்தம் என்ற பெயரில் கலகம் ஏற்படுத்தினார். இதனால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னையை அடுத்த கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அத்துடன் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் உறுதியானது.
சிறைவாசம், முதல்வராக எடப்பாடி: இதனால் சசிகலாவின் முதல்வர் பதவி கனவு தகர்ந்து போனது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் சசிகலா உள்ளிட்டோர் பெங்களூரில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிப்பது உறுதியானது. இதனால் அப்போது புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமியை சசிகலா தேர்வு செய்தார். பின்னர் 4 ஆண்டுகள் பெங்களூர் சிறையில் தண்டனையை அனுபவித்தார். 2021-ம் ஆண்டு பெங்களூர் சிறையில் இருந்து திரும்பிய சசிகலாவுக்கு அதீத பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்பட்டது.

அறிக்கைகளில் சசிகலா: அப்போது அதிமுகவில் சசிகலா பிரளயத்தை கிளப்புவார் என கூறப்பட்டது. ஆனால் 2021 சட்டசபை தேர்தலின் போது சசிகலா அமைதி காத்தார். அவ்வப்போது பொறுமை காப்பதாக அறிக்கை வெளியிட்டார். தமது இருப்புக்காக அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டே வந்தார் சசிகலா. செய்தியாளர்களை சந்தித்த போதும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என்றுதான் தெரிவித்தார் சசிகலா. ஒருபோதும் தீர்க்கமான முடிவு எதனையும் சசிகலா வெளிப்படுத்தவில்லை. அதிமுகவிலும் ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி வசமே அக்கட்சி முழுமையாகவும் சென்றுவிட்டது.
அதிமுக படுதோல்வி: இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. ஒரு இடத்திலும் கூட அதிமுக வெல்லவும் இல்லை. அதிமுக 3, 4வது இடத்துக்கு போனது. அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கவும் செய்தனர். இதனால் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்கிற குரல்கள் கேட்கின்றன. இதனை எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

திடீரென சீறிய சசிகலா: இந்த நிலையில் அதாவது சிறையில் இருந்து வெளியே வந்து 3 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமது ஜெயலலிதா இல்லத்தில் ஆதரவாளர்களை சந்தித்தார் சசிகலா. அப்போதுதான் அதிமுகவில் ஜாதி அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி என பகிரங்கமாக குற்றம் சாட்டியதுடன், ஜாதி சங்கங்களை நடத்த வேண்டியதுதானே எனவும் காட்டமாக விமர்சித்தார்.
தாக்கம் ஏற்படுமா?: ஒரு கட்டத்தில் அதிமுகவில் என் எண்ட்ரி ஆரம்பமாகிவிட்டது என ஒருவித தோரணையாகத்தான் சசிகலா உரத்து பேசினார். 2026-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைப்போம் என திட்டவட்டமாக நம்புவதாகவும் சசிகலா பேசினார். என்னதான் சசிகலா இப்படி பேசினாலும் அதிமுகவில் கலகத்தையோ சலசலப்பையோ ஏற்படுத்திவிட முடியுமா? என்பது நிச்சயம் மிகப் பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications