தொண்டர்களுக்கு கையசைத்து.. புத்தாண்டுக்கு வாழ்த்திய விஜயகாந்த்.. பார்த்ததும் ஆரவாரம் செய்த தொண்டர்கள்
சென்னை: நீண்ட நாட்களுக்கு பின் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்துள்ளார். தேமுதிக தலைமை அலுவலகம் வந்த விஜயகாந்த், தொண்டர்களை நோக்கி கையசைத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தீவிர அரசியலில் இருந்த போதே அரசியலில் கால் பதித்து பலரின் கவனத்தை ஈர்த்தவர் விஜயகாந்த். இவரது தலைமையில் தேமுதிக பல்வேறு தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியை பெற்று வந்தது.
ஆனால் 2016ம் ஆண்டு தேர்தலுக்கு பின் உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் விஜயகாந்த் தவித்து வந்தார். வெளிநாடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டும், விஜயகாந்தை மீண்டும் பழைய மாதிரி பார்க்க முடியவில்லை.
இதெல்லாம் புத்தாண்டே கிடையாது.. குடித்துவிட்டு ஆட்டம் போட்டால்.. சாபம் விடும் சாத்வி பிரக்யா தாகூர்
தொடர்ந்து விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததால், தொண்டர்களை சந்திக்காமல் இருந்து வந்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டசபைத் தேர்தல்களிலும் விஜயகாந்தை அதிகம் பார்க்க முடியவில்லை. அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் அவர் வீட்டிலேயே முடங்கினார். அவரது மனைவி மற்றும் மகன் கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மருத்துவ சிகிச்சை
கடந்த சில மாதங்களுக்கு முன் நீரிழிவு நோய் அதிகரித்ததால் அவரது கால் விரல் அகற்றப்பட்டன. அதேபோல் விஜயகாந்த் உடல் மெலிந்த நிலையில் இருந்த புகைப்படமும் வெளியாகி மக்களை கவலையடைய செய்தது. தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்த் ரசிகர்கள் அவரை நேரில் காண தவம் கிடந்தனர். இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் பிறந்தநாள் அன்றும், சுதந்திர தினத்தன்றும் தொண்டர்களை சந்தித்தார்.
விஜயகாந்த்தின் வழக்கம்
ஆனால் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை கூட ஏற்ற முடியாமல் விஜயகாந்த் தவித்தது அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆங்கில புத்தாண்டு அன்று கட்சி தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.
விஜயகாந்த் சந்திப்பாரா?
ஒவ்வொரு ஆண்டும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் புத்தாண்டு அன்று காலையில் தொண்டர்களை சந்திக்கும் விஜயகாந்த், அவர்களுக்கு ரூ.100 வழங்குவார். அப்போது கட்சி நிர்வாகிகள் விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் விஜயகாந்த் மீண்டும் தொண்டர்களை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தொண்டர்களுக்கு கையசைத்த விஜயகாந்த்
இந்த நிலையில் ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்கிறார். அன்று காலை 11 மணி அளவில் கட்சி அலுவலகத்துக்கு வரும் விஜயகாந்த், தொண்டர்களை சந்திக்கிறார் என்று தேமுதிக அறிவித்தது. இந்த நிலையில் தேமுகதிக அலுவலகம் வந்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தொண்டர்களை நோக்கி கையசைத்து புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். விஜயகாந்த் வருகையை அறிந்து தேமுதிக அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.