அட.. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் படத்தை கொஞ்சம் உற்று பாருங்க.. செம டெக்னிக்.. காத்திருக்கும் ட்விஸ்ட்
செங்கல்பட்டு: சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்து இருக்கும் நிலையில், பறவையின் பார்வையில் அது உதய சூரியன் வடிவில் கட்டப்பட்டு இருப்பது தெரிகிறது.
சென்னை மாநகரம் விரிவடைந்துகொண்டே செல்கிறது. எனவே பேருந்து நிலையங்களின் தேவையும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறநகரில் பேருந்து நிலையங்கள் அமைக்க கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் வெளிமாவட்ட பேருந்துகள் வந்து செல்ல புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. முழு வீச்சில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.

ரூ.400 கோடி மதிப்பு
ரூ.400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்த இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தள்ளிப்போனது. கடந்த அக்டோபர் மாதம் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தனர்.

2350 பேருந்துகள்
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "பொங்கலுக்குள் பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் பணிகள் 60 நாட்களுக்குள் முடிவடையும். 2350 பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் மிகப்பெரிய புறநகர் பேருந்து நிலையமாக இது இருக்கிறது.

ரயில் நிலையம் அமைக்க திட்டம்
பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்கும். இதேபோல் பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறம் ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு திறப்பு
புறநகர் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்வதற்கு புதிய ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார். இதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் மாதம் இறுதியில் மீண்டும் ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி, "பேருந்து நிலையத்தில் அடிப்படை கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. மின்சார இணைப்பு போன்ற சிறிய பணிகள் நிலுவையில் இருக்கின்றன. வரும் பொங்கலுக்குள் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்." என்றார்.

அமைச்சர் சேகர் பாபு
அண்மையில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு சிஎம்டிஏ பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்தார். அதன் பின்னர் பேசிய அவர், "பேருந்து நிலைய பணிகளை பொங்கலுக்குள் முடிக்க முயற்சி செய்வோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும்." என்றார்.

உதய சூரியனும் இரட்டை இலையும்
இதற்கிடையே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பல்வேறு புகைப்படங்கள், ட்ரோன் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பறவையின் பார்வையில் பார்க்கும்போது திமுகவின் உதயசூரியன் சின்னத்தைபோல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது விடப்பட்ட அரசு பேருந்துகளில் இரட்டை இலை சின்னம் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications