ஊதிய உயர்வு ஒப்பந்தம்.. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு திமுக ஆட்சியில் உடன்பாடு: அமைச்சர் சிவசங்கர்
சென்னை: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒப்பந்தத்தில் தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்திற்கான 7வது சுற்று பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் நடைப்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசு, போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகித ஊதிய உயர்வு அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பது இனி நான்காண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு
இதனால் அரசு போக்குவரத்து ஊழியரான ஓட்டுநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ.2012 ஆகவும், அதிகபட்சமாக ரூ.7,981 ஆக நிர்ணயிக்கப்பட்டு கையெழுத்தானது. அதே போல நடத்துநருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,965, அதிகபட்சமாக ரூ.6,640-க உயர்த்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு ரூ.9,329 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பதை சிஐடியு, ஏஐடியுசி சங்கங்கள் ஏற்கவில்லை.

அமைச்சர் சிவசங்கர்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதேபோல், மகளிர் இலவச பயணத்திற்கான வசூல் பேட்டா வழங்கப்படாமல் இருக்கும் கோரிக்கை ஏற்றக்கொள்ளப்பட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வசூல் படியில் ஏற்படும் இழப்பினை ஈடுசெய்து, தற்போது உள்ள வசூல் பேட்டா இரட்டிப்பாக்கி வழங்கப்படுகிறது.

குடும்ப நல நிதி உயர்வு
சலுகை படி, வசூல் பேட்டா, இரவு பயணப்படி உள்ளிட்டவை உயர்த்தி வழங்கப்பட உள்ளது. பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கு சிறப்பு நிதியாக பணி ஒன்றுக்கு ரூ.300 வழங்கப்படும்.

அதிமுக ஆட்சி
அதுமட்டுமல்லாமல் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதனை சீர் செய்து தர வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக இருந்தன. அதுதான் இப்போது பே மேட்ரிக்ஸ் என்ற பெயரில் சீர்திருத்தம் செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன. சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications