ஓஹோ.. “எல்லாமே பிளான்” அங்கே சொல்ல, இங்கே ஏற்பாடு நடக்க.. எடப்பாடி உற்சாகத்திற்கு காரணம் இதுதானா?
சென்னை : அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமை பதவியை ஏற்க வேண்டும் என குரல் எழுப்பிய 'ஒரே ஒருவர்' பற்றி ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக இன்று தெரிவித்துள்ளார்.
அவர்தான், இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பைக் கொடுத்து இபிஎஸ்ஸின் உச்சிகுளிரச் செய்துள்ளார்.
இதனால், கூட்டத்தில் எழுந்த 'ஒற்றைத் தலைமை' விவாதம் தொடங்கி எல்லாமே எடப்பாடி பழனிசாமியின் திட்டம்தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ஒற்றைத் தலைமை
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகி உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடந்த 14ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்தது குறித்து ஓப்பனாக தெரிவித்தார். இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் சலசலப்புகள் எழுந்தன.

தனித்தனியாக
ஒற்றைத் தலைமை விவாதம் பொதுவெளியில் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மாற்றி மாற்றி ஒற்றைத் தலைமை பற்றி போஸ்டர் யுத்தம் நடத்தி வருவதால் கட்சிக்குள் பதற்றம் நிலவி வருகிறது.

ஒரே ஒருவர்
இந்நிலையில், இன்று பேட்டி அளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மற்றவர்கள் எல்லாம், யாருடைய மனமும் நோகாதவாறு ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள். யாரும் இவர்தான் ஒற்றைத் தலைமையாக வேண்டும் எனச் சொல்லவில்லை. அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஒரே ஒருவர் மட்டும்தான் எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்று சொன்னார் எனத் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில்
இதற்கிடையே, நேற்று தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு சென்றிருந்த பழனிசாமி, இன்று திருவண்ணாமலையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக சேலத்தில் இருந்து வருகை தந்த எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, வழிநெடுக திருவண்ணாமலை மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்தனர்.

ஓ.பி.எஸ் புறக்கணிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனர்களில், "எங்களின் ஒற்றைத் தலைமையே வருக வருக" என்றும் "பொதுச் செயலாளரே வருக வருக" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான பேனர்களில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் படங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.

பிரமாண்ட வரவேற்பு
ஒற்றைத் தலைமை பிரச்சனை சுற்றி அடித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் பவரை காட்டும் நோக்கத்தில் மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பயங்கர கூட்டத்தைக் கூட்டியுள்ளார். எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்ததால் எடப்பாடி பழனிசாமியே கூடுதல் உற்சாகமாகியுள்ளார். திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ளார்.

பிளான்
இந்த விஷயம்தான் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. மா.செக்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என அனைவரும் பொதுவாக பேசிய நிலையில், எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் எனக் குறிப்பிட்டு பேசியவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என ஓ.பி.எஸ் கூறியுள்ளார். அதேநேரத்தில், இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமியை வரவழைத்து பிரமாண்ட கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டியுள்ளார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

எடப்பாடியின் திட்டம்
இதனால், ஒற்றைத் தலைமை விவகாரம் பேசப்பட்டது தொடங்கி எல்லாமே எடப்பாடி பழனிசாமியின் திட்டம் தான் எனச் சந்தேகம் கிளப்பப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல், இன்று திருவண்ணாமலை முழுக்க, 'ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமி' என பேனர்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அமைக்கப்பட்டிருந்தன. ஒற்றைத் தலைமை குறித்து பேசியவர்களை கண்டிக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்திய நிலையில், அப்படி குரல் எழுப்பியவர் நடத்திய பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

என்ன நடக்கும்?
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக உள்ள வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதை பொதுவெளியில் சொல்லாமல் மழுப்பி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தான் அதை வெளிப்படையாக பேசி வந்தனர். இந்த விவாதங்கள் பூதாகரமாக உருவெடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டே இப்படிச் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications