தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே!
சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்த கட்சித் தாவல் விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார். அதேநேரத்தில், பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசுக்கு எதிராக அ.தி.மு.க. கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து, அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.
ஜேசிடி பிரபாகர்
அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 21 எம்.எல்.ஏ.க்களும் தங்களது செயலுக்காக வருத்தம் தெரிவித்து விளக்கக் கடிதம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படாது. அவர்கள் தெரிவித்த வருத்தத்தையும், கட்சி தலைமையின் கருத்தையும் பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏக்கள்
இதன் மூலம் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளனர். கடந்த சில வாரங்களாக இவர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வந்த நிலையில், சபாநாயகரின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ராஜினாமா
ஆனால், மற்றொரு பக்கம் ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நடவடிக்கை தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. கட்சியின் கொறடா உத்தரவை மீறியதோடு மட்டுமல்லாமல், பதவியையும் துறந்து வேறு கட்சியில் இணைந்துள்ளதால் அவர்கள் மீது தகுதி நீக்க நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் விளக்கமளித்தார்.
இசக்கி சுப்பையா
அதன்படி, சத்ய பாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை நடைபெற்று வருகிறது. விசாரணை நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், 21 பேரை தகுதி நீக்கம் செய்திருந்தால் அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை பலம் மேலும் குறைந்திருக்கும்.
எடப்பாடி பழனிசாமி
அதே நேரத்தில், அந்த எம்.எல்.ஏ.க்களை மீண்டும் கட்சிக்குள் வைத்துக்கொண்டு எதிர்கால அரசியல் திட்டங்களை முன்னெடுக்க எடப்பாடி பழனிசாமி விரும்பியதாக கூறப்படுகிறது. மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 பேரின் விவகாரம் தற்போது சட்டரீதியாக சிக்கலை சந்தித்துள்ளது. அவர்களின் ராஜினாமா செல்லுபடியாகுமா, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அரசியல் கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications