மொத்தமாக 37 தொகுதிகள்.. தலைநகரில் கவனம் செலுத்தாத எடப்பாடி பழனிசாமி.. குமுறும் அதிமுக நிர்வாகிகள்!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 37 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை என்று அதிமுகவினர் புலம்ப தொடங்கியுள்ளனர். அதிமுகவுக்கு சாதகமான சில தொகுதிகளிலும் பாஜகவினர் களமிறங்க வாய்ப்பு இருப்பதால், அங்கு பணியாற்றலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், என்டிஏ கூட்டணி சற்று வேகம் எடுத்துள்ளது. அதிமுக கூட்டணியில் அமமுக வந்திருப்பதால், தென் மாவட்டங்களில் கொஞ்சம் உத்வேகத்துடன் சில நிர்வாகிகள் பணியாற்ற தொடங்கியுள்ளனர். ஆனால் தலைநகர் சென்னையில் அதிமுக பிரமுகர்கள் சோகத்துடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

2021 சட்டசபைத் தேர்தலில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 37 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் மதுராந்தகத்தில் மட்டுமே அதிமுக வெற்றியை பெற்றது. மீதமுள்ள 36 தொகுதிகளிலும் திமுக கொடி நாட்டியது. இதனை மீட்பதற்கான பணிகளில் அதிமுக இதுவரை எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்கள், கட்டமைப்பு மற்றும் பூத் கமிட்டி உள்ளிட்டவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் சென்னையில் உள்ள மாவட்ட நிர்வாகிகளிடம் பெரியளவில் விசாரிப்பதில்லை. 3 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பூத் கமிட்டியை சரியாக அமையுங்கள் என்று மட்டும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்னொரு பக்கம் அதிமுகவினர் தலைநகரில் பணியாற்றலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். இதன் காரணமாக பெரம்பூர், திரு விக நகர், எழும்பூர், துறைமுகம், கொளத்தூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, ஆலந்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் எதிர்பார்த்த அளவிற்கு விருப்ப மனு கூட வரவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இதனை எடப்பாடி பழனிசாமியும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. வேளச்சேரி, விருகம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த தொகுதிகளில் அதிமுக நிர்வாகிகளை வைத்து பணிகளை செய்ய தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் அதிமுக நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி எந்த ஆலோசனையும் செய்யவில்லை.
அதேபோல் கடைசி நேரத்தில் தொகுதி பாஜக வசம் கொடுக்கப்பட்டால், என்ன செய்வது என்று அதிமுகவினரும் பெரிதாக செலவு செய்து கூட்டம் நடத்த தயாராக இல்லை. அதேபோல் தலைநகரில் தமிழிசை செளந்தரராஜன், எஸ்ஜி சூர்யா, வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் தொகுதிகளை கைப்பற்றிவிடுவார்கள் என்பது அதிமுகவினருக்கு நன்றாக தெரிந்துள்ளது. இதனால் பாஜகவுக்காக பணியாற்ற அதிமுகவினர் தயாராக இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தலைநகரில் மீண்டும் அதிமுக பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications