கே.சி. வீரமணி வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்.. போலீஸாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி வீட்டில் நடந்த ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு நடந்தது.
அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரின் பேரில் அவரது வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

வேலூர், திருப்பத்தூர், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீரமணியின் உறவினர்கள், அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை நடைபெற்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோலார்பேட்டை அருகே இடையாம்பட்டியில் அதிமுகவினர் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கையை எதிர்த்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீஸார் அவர்களை கலைக்கச் சென்றனர்.
அப்போது போலீஸாருக்கும் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கூறி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது தொண்டர்கள் அனைவரும் அமைச்சரை பார்ப்பதற்கு வழக்கறிஞர் மற்றும் தொண்டர்களை யாராவது ஒருவரை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இருந்த போதிலும் அமைச்சர் வீட்டின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications