சின்னம் வேண்டும் தொண்டனுக்கு! ஓபிஎஸ்- இபிஎஸ் போட்டியால் முடங்கும் இரட்டை இலை? கொந்தளிக்கும் ரரக்கள்!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், அவர்கள் இருவரும் கையெழுத்திட்டால் தான் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதால் 'சின்னம் வேண்டும் தொண்டனுக்கு' என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
அதிமுக பொதுக்குழு..23 தீர்மானங்கள்..ஹைகோர்ட் தீர்ப்புக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் அப்பீல்
உள்ளாட்சி இடைத் தேர்தல்
இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், இன்று மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. கட்சி அடிப்படையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கட்சிகளின் சின்னத்தை ஒதுக்கும். கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஓபிஎஸ் - இபிஎஸ் கையெழுத்து
அந்தப் அந்தப் படிவங்களை கட்சியின் தலைமை பொறுப்பில் யார் இருக்கிறார்களோ அவர்கள் கையெழுத்து போட வேண்டும் அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்த படிவங்களை கையெழுத்து இடவேண்டும்.
கட்சிக்குள் மோதல்
தற்போது ஒற்றை தலைமை விவகாரத்தில் இருவருக்குள்ளும் மோதல் வெடித்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை செல்லாது என சிவி சண்முகம் கூறினார். மேலும் கட்சியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில் அவர்தான் ஒருங்கிணைப்பாளராக தொடர்வதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் கட்சி சின்னத்தை ஒதுக்கீடு செய்யும் ஃபார்ம் ஏ ஃபார்ம் பி ஆகிய இரண்டு படிவங்களை யார் கையெழுத்து போட வேண்டும் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
தொண்டர்கள் கோரிக்கை
தற்போதுள்ள விதிகள் படி இருவருமே கையெழுத்து போட்டால் தான் செல்லும். ஒருவேளை ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி இருவருமே தனித்தனியே வேட்பாளர்கள் நிறுத்தி பலப்பரிட்சை நடத்தினால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் மீண்டும் இரட்டை இலை சின்னம் முடங்கி போகும் அபாயமும் உள்ளது. இந்நிலையில் கட்சி பதவிக்காக தலைவர்கள் இருவரும் அடித்துக் கொள்ளும் நிலையில் சாதாரண தொண்டனின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் சின்னம் வேண்டும் தொண்டனுக்கு என்ற முழக்கம் சமூக வலைதளங்களில் அதிமுக தொண்டர்களால் பரப்பப்பட்டு வருகிறது.