சாந்தினிக்கு 3 கருக்கலைப்பு.. விசாரணை வளையத்தில் சென்னை மருத்துவமனை.. ராமநாதபுரம் விரைந்த தனிப்படை
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் கருவுற்று 3 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் குறிப்பிட்ட மருத்துவமனையில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்த இவர் மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்றவர்.
இவர் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த ஒரு புகார் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சருடன் நெருங்கி பழகியது.. நான் செய்த முட்டாள்தனம்.. மருத்துவருடன் சாந்தினி பேசிய ஆடியோ ரிலீஸ்
6 பக்க புகாரில் குமுறல்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதுதான் பக்கம் பக்கமாக மொத்தம் 6 பக்கங்களில் புகார் பட்டியல் கொடுத்தார் சாந்தினி. மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உடல் உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன் மனைவி போல சென்னையில் ஒரே வீட்டில் வாழ்ந்தோம். அதனால் 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். ஆனால் அவரது மிரட்டலின் பேரில் அவரது மருத்துவ நண்பர் மருத்துவமனையில் வைத்து கரு கலைக்கப்பட்டது. இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். அடிக்கிறார், உதைக்கிறார். காப்பர்-டி போட வைத்து உறவு வைத்ததால், எனக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு தனது புகார் மனுவில் நடிகை சாந்தினி தெரிவித்து இருந்தார்.
மணிகண்டன் புகார்
இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்தார். நடிகை சாந்தினி யார் என்றே எனக்கு தெரியாது என்றும் பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
சைபர் கிரைம் போலீஸ்
இந்த நிலையில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்தகட்டமாக மணிகண்டனிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்ய நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் சாந்தினி கொடுத்துள்ள ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். சைபர் கிரைம் போலீசாரும் அவர் கொடுத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை சோதித்து பார்த்து வருகிறார்கள்.
Recommended Video
டாக்டரிடம் பேசிய ஆடியோ
அவர் 3 முறை கருக்கலைப்பு செய்ததாக சொல்கிறார். கருக்கலைப்பு நடந்ததாக கூறப்படும் மணிகண்டனின் நண்பர் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவருடன் சாந்தினி உரையாடிய ஆடியோ ஒன்றும் புகாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்மை குறித்தும் விசாரணை நடக்கிறது.
மருத்துவமனையில் விசாரணை
இது மோசடி மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் ஆதாரங்கள்தான் வழக்கில் தாக்குப்பிடிக்கும். சாந்தினி கருக்கலைப்பு செய்த மருத்துவமனையில் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மணிகண்டனின் கார் டிரைவருக்கு தங்கள் உறவு பற்றி தெரியும் என சாந்தினி தனது புகாரில் கூறியிருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது அவரிடம் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது. இந்த விசாரணை முடிவடைந்ததும், கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறப்படுகிறது.
மனைவி புகார்
இதனிடையே, தனது கணவருக்கும் தனக்கும் சாந்தி மன உளைச்சல் தருவதாகவும், அவர் புகாரில் உண்மையில்லை என்றும், மணிகண்டன் மனைவி ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரையும் சேர்த்து விசாரிக்குமாறு, அடையாறு காவல்துறையினருக்கு ராமநாதபுரம் எஸ்பி சிபாரிசு செய்துள்ளார்.
தனிப்படை விரைந்தது
ராமநாதபுரத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி தந்ததாக துணை நடிகை சாந்தினி தனது புகாரில் கூறியிருந்த நிலையில், அந்த மாத்திரை வாங்கப்பட்ட இடத்தில் விசாரணை நடத்த தனிப்படையினர் ராமநாதபுரம் விரைந்துள்ளனர். சாந்தினி வெளியிட்ட சாட்டிங் லிஸ்டில், ராமநாதபுரத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி தருவதாக கூறியிருப்பது போல டெக்ஸ்ட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.