அதிமுக நிர்வாகி கட்சியை விட்டு நீக்கம்..உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடப்பதாக கூறியதால் நடவடிக்கை!
சென்னை: மதுரை வடக்கு 2 ஆம் பகுதி 15 கிழக்கு வட்டச் செயலாளர் எம்.உதயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டி இருந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி அதிமுக 15வது வார்டு வட்டச் செயலாளர் உதயகுமார் அண்மையில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், "அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கையில் சேர எங்களுக்கு டார்கெட் நிர்ணயிக்கிறார். அதிமுகவில் சேர யாரும் வராததால் வாக்காளர் பட்டியலை வைத்து போலியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.
எல்லா கட்சிக்காரர்களும் வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள். அவர்களை எப்படி அதிமுகவில் உறுப்பினராக சேர்க்க முடியும்? போலியாக கையெழுத்து போட்டு கொடுக்கச் சொல்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இதேபோல் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது பொதுச் செயலாளர் கவனத்துக்குப் போக வேண்டும்." என்று தெரிவித்தார்.

அதிமுகவில் நிர்வாகிகளின் நெருக்கடி காரணமாக மதுரையில் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கட்டுக்கட்டாக உறுப்பினர் அட்டைகளை வைத்துக்கொண்டு கட்சி நிர்வாகியே குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அதிமுகவினர் இடையே சலசலப்பு எழுந்தது.
இந்நிலையில், அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடப்பதாக ஊடகங்களில் பேட்டி அளித்த, மதுரையைச் சேர்ந்த வட்டச் செயலாளர் உதயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. M. உதயகுமார், (15 கிழக்கு வட்டக் கழகச் செயலாளர், ஜவஹர்புரம், மதுரை வடக்கு 2-ஆம் பகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications