வெளியான அதிமுகவின் “டாப் சீக்ரெட்”.. உள்ள இவ்ளோ இருக்கா? கொட்டித்தீர்த்த பொன்னையன் - பூதாகரமான ஆடியோ
சென்னை: அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மோதல்கள் குறித்தும் அதிமுக மூத்த தலைவர் பொன்னையனின் தொலைபேசிய உரையாடல் சற்றுமுன் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாகி இருக்கிறது.
ஓபிஎஸ் தரப்பின் பல்வேறு முட்டுக்கட்டைகளை கடந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர். பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

பொன்னையன் ஆடியோ
எடப்பாடி பழனிசாமி ஒரு வழியாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும், பொதுக்குழு நிகழ்வுகள் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அந்த வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பொன்னையனின் தொலைபேசி உரையாடலை பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார். அது எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஸ்டாலினை நாடும் தங்கமணி
கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கே.எஸ்.கோலப்பனிடம் பேசிய அதிமுக மூத்த உறுப்பினர் பொன்னையன், "தொண்டர்கள் இரட்டை இலை பின்னால் நிற்கிறார்கள். தலைவர்கள் பணத்துக்காக நிற்கிறார்கள். பணத்தை பாதுகாப்பதற்காக டெல்லியை பிடித்துக்கொண்டு போட்டிபோட்டுக்கொண்டு ஆடுகிறார்கள். தங்கமணியும் தன்னை காப்பாற்றிக்கொள்ள மு.க.ஸ்டாலினை நோக்கி ஓடுகிறார். கே.பி.முனுசாமியும் ஸ்டாலினை விமர்சிப்பதை நிறுத்திவிட்டார்.

கே.பி.முனுசாமி ஒரு நக்சலைட்
துரைமுருகன் உதவியுடன் குவாரியை பெற்று மாதம் 2 கோடி வருமானம் ஈட்டுகிறார் கே.பி.முனுசாமி. கொள்ளையடித்து கோடீஸ்வரனாக இப்படி ஆடுகிறார்கள். தொண்டன் தடுமாறுகிறான். கே.பி.முனுசாமி நக்சலைட்டாக இருந்தவர். தேவாரம் டிஜிபி இதை சொன்னதால் ஜெயலலிதாவே அவரை ஒதுக்கினார். ஸ்டாலின் தயவுக்காக திமுகவை நாம் திட்டுவது கிடையாது. பாஜக அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார். நமது ஆட்கள் கோடி கோடியாக கொள்ளையடித்தவுடன் ஈட்டியில் குத்துவார் ஸ்டாலின் என்று திமுகவை எதிர்ப்பது இல்லை.

மாவட்டச் செயலாளர்கள்
எடப்பாடிக்கு கொஞ்சம் ஆதரவு இருப்பதற்கு காரணம், மம்தா பானர்ஜிபோல் என்னவானாலும் பரவாயில்லை என்று ஸ்டாலினை விமர்சிக்கிறார். எடப்பாடியின் சம்பந்தியின் பெயரிலேயே ஸ்டாலின் வழக்கை போட்டுவிட்டார். குறைந்தது ரூ.100 கோடி, ரூ.200 கோடி இல்லாத மாவட்டச் செயலாளரே அதிமுகவில் இல்லை. சசிகலா காலத்தில் மாவட்டச் செயலாளருக்கு ஒன்றரை சதவீதம் மட்டுமே கிடைக்கும். இப்போது 14 சதவீதத்தையும் மாவட்டச் செயலாளர்களே எடுத்துக்கொள்கிறார்கள். தலைமை கழகத்துக்கு அவர்கள் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. எடப்பாடி பின்னால் சென்றால்தானே அதை பாதுகாக்க முடியும்.

சமாதானம் விரும்பிய எடப்பாடி
தளவாய் சுந்தரம்தான் இந்தியாவின் மிகப்பெரிய புரோக்கர். பொதுக்குழு உறுப்பினர்கள்தான் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும்.
அதிமுக விதிகளின்படி நான் தீர்மானங்களை படிக்க சென்றபோது எனக்கு முன் சி.வி.சண்முகம் ரத்து ரத்து என்று கத்தினார். கே.பி.முனுசாமியும் சி.வி.சண்முகமும் செய்ததால்தான் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றோம். எடப்பாடி பழனிசாமி சமாதானமாக போய்விடலாம் என்று நினைத்தார். ஆனால், அவருக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு அதிகம் இல்லை. கொள்ளையடித்த எம்.எல்.ஏக்கள் எடப்பாடியின் முதுகிலேயே குத்திவிட்டனர். அதனால்தான் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினார்.

எம்.எல்.ஏக்கள் ஆதரவு
சி.வி.சண்முகம் என் மகனைவிட 4 வயது இளையவர். அவர் தந்தையும் நானும் ஒன்றாக சட்டம் படித்தோம். பகலிலேயே குடிப்பார். அவர் கையில் அவரது சமுதாயத்தை சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள். கொங்கு மண்டலத்தை சேர்ந்த 42 எம்.எல்.ஏக்களில் எடப்பாடி பழனிசாமிக்கு 9 பேர்தான் ஆதரவு. மீதி இருக்கு எம்.எல்.ஏக்களை தங்கமணியும், வேலுமணியும் தங்கள் கைகளில் வைத்து உள்ளார்கள். இதனால் எடப்பாடிக்கு வேறு வழியில்லை. முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக எடப்பாடி, வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் எல்லோரையும் கையில் வைத்துள்ளார்.

சாதி அடிப்படையில் சதி
நாளை கே.பி.முனுசாமியும் ஒற்றைத் தலைமைக்கு வரலாம். அப்படி ஒரு முயற்சி நடக்கிறது. எம்.எல்.ஏக்கள் ஆதரவை வைத்துதான் எதிர்காலம். சாதி அடிப்படையில் ஒரு குழு வேலை செய்துகொண்டிருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி கொள்கையை காற்றில் வீசிவிட்டு பதவிக்காக ஓடிக்கொண்டிருக்கிறார். யாருக்குமே கட்சிக்கு விசுவாசம் இல்லை, அம்மாவுக்கும் விசுவாசம் இல்லை, தலைவருக்கும் விசுவாசம் இல்லை. எம்.ஜி.ஆர். ஆவி எல்லோரையும் காப்பாற்றும்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications