அதிமுக பொதுக்குழு வழக்கில் சாதகம்.. ஹைகோர்ட் பச்சைக்கொடி.. எம்ஜிஆர் மாளிகை செல்வாரா ஓபிஎஸ்?
சென்னை: எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் அவர் அதிமுக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகைக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது, ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார். மேலும் யாரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய பிறகு சாவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக அலுவலகம் சாவி
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வழக்கில் அதிமுக தலைமை கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. மேலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது எனவும் போதிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஓ.பன்னீர் செல்வம் அப்பீல்
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் வட்டாட்சியர் தலைமைக் கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைத்ததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஆகஸ்ட் 19ம் தேதிக்கு முன் பட்டியலிட்டு விசாரிக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பொதுக்குழு வழக்கு தீர்ப்பு
இதனிடையே சென்னை வானகரத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

சாதகமான தீர்ப்பு
நீதிபதி ஜெயந்திரன் வழங்கிய தீர்ப்பில், அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் பொதுக்குழு கூட்ட வேண்டும் எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுக்குழு வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது ஓ.பன்னீர் செல்வத்தை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பழைய நிலையே நீடிக்கும்
செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், இது அதிமுக மீண்டும் வீறு கொண்டு எழுந்து திறம்பட ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் செயல்பட நீதிமன்றம் அனைத்து விதமான ஒப்புதல்களையும் அளித்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து அந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லத்தக்கதல்ல என்றே அர்த்தம்.

ஓ.பன்னீர் செல்வம்
ஜூன் 23ஆம் தேதியன்று எந்த பதவியும் காலாவதி ஆகவில்லை என்று வைக்கப்பட்ட வாதம் நீதிபதியால் ஏற்கப்பட்டது. எந்த விதமான சட்ட சிக்கலும் இல்லை. ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வைக்கப்பட்ட அனைத்து வாதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார். ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் எப்போது செல்வார் என்ற கேள்விக்கு, அதிமுக அலுவலக சாவி வழக்கில் நீதிபதி அளித்துள்ள தீர்ப்பின் படி இப்போதைக்கு செல்ல வாய்ப்பில்லை என்று கூறினார்.

எம்ஜிஆர் மாளிகைக்கு எப்போது செல்வார்?
ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் தங்களுக்குக் கிடைத்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அதே வேகத்தோடு அவர் அதிமுக அலுவலகமாக எம்ஜிஆர் மாளிகைக்கு சென்றிருக்க வேண்டும். சாவியை யாரிடம் ஒப்படைப்பது என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் அந்த தீர்ப்புக்குப் பின்னரே அவர் அதிமுக அலுவலகம் செல்வார் என்று எதிர்பார்க்கலாம். கடந்த ஜூலை 11ஆம் தேதியன்று ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகம் சென்ற போது நிகழ்ந்த வன்முறையை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிமுக ஓ.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையே இணக்கம் ஏற்படுமா என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications