நடிகர் அஜித்திற்கு எடப்பாடி பிறந்தநாள் வாழ்த்து.. எக்ஸ் பதிவில் இந்த விஷயத்தை நோட் பண்ணீங்களா
சென்னை: நடிகர் அஜித்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பல துறைகளில் தனது திறமைகளைத் தொடர்ந்து வெளிக்காட்டி, பல சாதனைகளை புரிந்து வருகிறார் அஜித்குமார் என்றும், பல்துறை வித்தகராக அவர் மென்மேலும் சிறக்க வாழ்த்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் இன்று தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஜித்குமாருக்கு பிறந்த நாள்
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித்திற்கு இன்று 54 வது பிறந்த நாளாகும். அஜித் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறர்கள். சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் அஜித்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
அரசியல் ரீதியாக கவனம்
தனித்தன்மை மிக்க நடிப்பாற்றலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள திரை ஆளுமை; கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் வடிவமைப்பு என பல துறைகளில் தனது திறமைகளைத் தொடர்ந்து வெளிக்காட்டி, பல சாதனைகளையும் புரிந்து வரும் அன்புச் சகோதரர் "பத்ம பூஷன்" திரு. #அஜித்குமார் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!பல்துறை வித்தகராக அவர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவுடன் ஜெயலலிதாவிடம் அஜித் விருது வாங்கும் படத்தையும் எடப்படி பழனிசாமி பகிர்ந்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துப்பதிவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித் என குறிப்பிட்டு இருப்பதோடு, ஜெயலலிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருப்பதும் கவனம் பெறுவதாக அமைந்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
தேர்தலில் விஜய் போட்டி
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வரும் தேர்தலில் பலமுனை போட்டி நிலவும் எனத் தெரிகிறது. தமிழ் திரையுலகில் மற்றொரு உச்ச நடிகரான விஜய் முதல் முறையாக அரசியல் களம் காண்கிறார். திமுகவை அரசியல் எதிரி எனவும் பாஜகவை கொள்கை எதிரி எனவும் அறிவித்துள்ள விஜய், வரும் தேர்தலில் இந்த கட்சிகளுக்கு மாற்றாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சித்து வருகிறார். இத்தகைய அரசியல் சூழலில், எடப்பாடி பழனிசாமியின் பதிவு அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications