அதிமுகவை அதிர வைத்த சர்வே நிலவரம்.. மாறும் தேர்தல் வியூகம்.. பரபரப்பு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினர் சர்வே நடத்தி அதில் வரும் தகவல்களை அடிப்படையாக வைத்து தேர்தல் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பிரதான கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.கவும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.
10 ஆண்டுகால ஆட்சி அப்படியே தொடர வேண்டும்' என்று அ.தி.மு.கவும், இந்தமுறை அரியணையில் ஏறியே ஆக வேண்டும்' என்ற முனைப்பில் தி.மு.கவும் தேர்தல் பிரசார வியூகங்களை வகுத்து பணியாற்றி வருகின்றன.
அதிமுக வேலை
அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதால், ஆட்சியாளர்கள் மீது பொதுவாக ஏற்படும் அதிருப்தி அலைகளை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்று திமுக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. அதேநேரம் எந்த மாதிரியான அதிருப்தி நம் மீது வருகிறது. என்னென்ன பகுதிகளில் என்ன பிரச்சனை என்பது தனியாக டீம் போட்டு கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற் போல் பிரச்சார யுக்திகளை வகுத்து வருகிறது அஇஅதிமுக.
1,500 ரூபாய்
அதிமுக அரசு அண்மையில் அறிவித்த அம்மா வாஷிங்மெஷின் வாக்குறுதியும் 1,500 ரூபாய் பிளஸ் 6 சிலிண்டர்கள் போன்ற திட்டங்கள் எந்த அளவிற்கு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, எப்படி மக்கள் அதனை பார்க்கிறார்கள், திமுகவின் வாக்குறுதிகளை எப்படி பார்க்கிறார்கள் என்றெல்லாம் ரகசியமாக சர்வே செய்து பார்த்திருக்கிறார்கள்,
சர்வே நடத்தியது
சட்டமன்றத் தேர்தல் நாளான ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால், அ.தி.மு.க அரசுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தனியார் ஏஜென்சிகள் மூலம் சில அமைச்சர்கள் மேற்கொண்டிருககிறார்கள். அதில் சர்வேயில் கிடைத்த பாசிட்டிவ், நெகட்டிவ் அம்சங்களை மையமாக வைத்தே களநிலவரத்தில் மாற்றங்களை அமைச்சர்கள் செய்து வருகின்றனராம்.
50 தொகுதி நிலவரம்
கடந்த 15 ஆம் தேதி முதல் இந்த சர்வே பணிகள் மாநிலம் முழுவதும் பரவலாகத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக 40 பேர் கொண்ட அணி ஒன்று களமிறக்கிவிடப்பட்டதாம் ஒரு தொகுதிக்கு 2 நாள்கள் என்ற வீதத்தில் சர்வே பணிகள் நடந்ததாம். முதல்கட்டமாக 234 தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கான களநிலவரம் தெரிந்திருக்கிறது.
ஸ்டாலின் பெயர் அதிகம்
இதில் அ.தி.மு.க அரசின் தேர்தல் கால வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் சென்றடைந்துவிட்டது சர்வேயில் தெரியவந்துள்ளது. தி.மு.க அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற வாக்குறுதி மட்டுமே மக்கள் மனதில் பதிந்துள்ளது. அதேநேரம், அ.தி.மு.க அரசின் அம்மா வாஷிங்மெஷின் வாக்குறுதியும் 1,500 ரூபாய் பிளஸ் 6 சிலிண்டர்கள் என்ற திட்டமும் மக்களிடம் எடுபட்டுள்ளது. அதேநேரம், அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்?' என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியைவிடவும் ஸ்டாலின் பெயரைத்தான் பெரும்பாலான மக்கள் முன்மொழிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மக்கள் கருத்து என்ன
ஆனால், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி குறித்து மக்கள் மத்தியில் மோசமான பதில்கள் எதுவும் வரவில்லையாம்.. மேலும் எடப்பாடி அரசின் செயல்பாடுகள் அபாரம் என்றோ, சுமார் என்றோ யாரும் சொல்லவில்லை. ஒரு சிலர் மட்டுமே கூறியிருக்கிறார்களாம் இந்த ஆட்சி மோசம்' என சிலரே பதில் அளித்துள்ளார்களாம். இது தொடர்பாக பிரலமான தமிழ் ஊடகமாக பிபிசியிடம் சர்வே நடத்திய சிலர் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்கள். அதன்படி நீட் மற்றும் ஸ்டெர்லைட் தொடர்பான விஷயங்களில் அரசுக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்களாம். மக்களிடம் சிலிண்டரை விடவும் வாஷிங் மெஷினும் 1,500 ரூபாயும் மக்களிடம் எடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் சோலார் அடுப்பு வாக்குறுதி மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லையாம். ஒட்டுமொத்தமாக பார்த்தால் சர்வே முடிவுகள், ஆட்சிக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ இல்லையாம். இதனால் குழம்பிபோன அதிமுகவினர் வியூகத்தை மாற்றி களநிலவரததிற்கு ஏற்ப தீவிரமாக வேலை செய்ய தொடங்கி உள்ளனர். எங்கெல்லாம் அதிருப்தி என்பதை அறிந்து சமாளித்து வெல்ல முனைப்பு காட்டி வருகிறது.