முஸ்லிம் வாக்குகளை மீண்டும் பெறுவது எப்படி? அக்னி பரீட்சையில் அண்ணா திமுக- விடாது விரட்டும் பாஜக!
சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளராக அன்வர் ராஜாவை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென நியமித்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இறுக்கமான நெருக்கத்தில் இருந்தது அதிமுக. பாஜகவின் இன்னொரு கிளை அமைப்பு போலத்தான் அதிமுக செயல்பட்டு வந்தது என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து.

ஜெயலலிதா மறைந்த நாள் முதலே பாஜகவின் பிடியில்தான் அதிமுக இருந்தது. அதிமுகவில் பிளவுகள் ஏற்படவும் பிளவுகளை சரி செய்யவும் டெல்லி பாஜக தலைமை தலையிட்டுக் கொண்டிருந்தது. அதிமுகவுக்குள் பிரச்சனை என்றால் ஏதோ ஒரு மாநில பிரிவு போல டெல்லி பாஜக தலைமையிடம் போய் புகார் சொல்லி தீர்வுக்கு காத்திருக்கிற நிலைமையில்தான் அக்கட்சித் தலைவர்கள் இருந்தனர் என்பதும் கடந்த கால வரலாறு.
அதிமுக- பாஜக கூட்டணி முறிவு: ஆனால் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என தமிழாடு பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியதுதான் பிரச்சனைக்கு காரணமாகிவிட்டது. பெரும் போராட்டத்துக்குப் பின் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைபற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு, பாஜகவின் இந்த நிலைப்பாடு கொஞ்சமும் சகிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதனால் இனியும் பாஜகவின் கூட்டணி தேவையே இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டது அதிமுக.
விலகிப் போன முஸ்லிம் வாக்குகள்: 2019 லோக்சபா தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தல்களை பாஜகவுடன் இணைந்தே அதிமுக சந்தித்தது. இதனால் இயல்பாகவே இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு கொஞ்சமும் கூட விழவில்லை. இப்போது பாஜகவுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. ஆனாலும் இஸ்லாமியர்களை உடனே அதிமுக பக்கம் திருப்பிவிட முடியாது.
அன்வர் ராஜா ரிட்டர்ன்: இதனால் முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் காட்சிகளை அடுத்தடுத்து அரங்கேற்ற திட்டமிட்டுள்ளது அதிமுக. இதன் முதல் கட்டமாகவே ஓரம்கட்டப்பட்டிருந்த அன்வர் ராஜாவுக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. பாஜகவுடனான கூட்டணியை விமர்சித்துக் கொண்டிருந்ததால் அதிமுகவில் ஆகாத மருமகள் கதையாக தூக்கி எறியப்பட்டவர்தான் அன்வர் ராஜா. இப்போது அன்வர் ராஜாவை மீண்டும் சீனுக்கு கொண்டு வந்திருக்கிறது அதிமுக.
முஸ்லிம் வாக்குகள்: இதனைத் தொடர்ந்து அதிமுக ஆதரவு முஸ்லிம் கட்சிகள் எண்ணிக்கையை கிடுகிடுவென அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாம். குறிப்பாக இஸ்லாமிய சிறைக் கைதிகள் விவகாரத்தை முன்வைத்து திமுக அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு ப்ளான் போடுகிறதாம் அதிமுக. அப்படியான ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் போது கணிசமான முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள் தம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆபரேஷன் "M" என்று சொல்லுமளவிற்கு முஸ்லிம்களை டார்கெட் செய்து படுவேகமாக காய் நகர்த்துகிறதாம் அதிமுக.












Click it and Unblock the Notifications