ஓபிஎஸ்சுக்கு பெரிய அடி.. "கட்சியை விட்டே போறேன்.." பன்னீருக்கு கல்தா கொடுத்த கோவை செல்வராஜ்!
சென்னை : அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் பலம் பொருந்திய தளபதிகளில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் அவரது அணியில் இருந்து மட்டுமல்லாது அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் ஆனது நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களையும் அடுத்த கட்ட நகர்வுகளையும் சந்தித்து வருகிறது. ஓபிஎஸ் இபிஎஸ் இடையேயான மோதலால் கட்சி பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக செயல்பட முடியவில்லை என அக்கட்சி தொண்டர்களை புலம்பி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்த இயக்கம் அவரது மறைவுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ஏதாவது ஒரு பிரச்சனையை சந்தித்து தான் வருகிறது.
அதிமுக அவைத்தலைவரின் ஆன்மிக பயணம்! எடப்பாடிக்காக தர்ஹா.. தர்ஹாவாக செல்லும் தமிழ் மகன் உசேன்!
அதிமுகவில் சிக்கல்
ஓபிஎஸ் -சசிகலா விவகாரம், டிடிவி தினகரன் பிரிந்தது, அணிகள் இணைந்தது, முதல்வர் வேட்பாளர் விவகாரம், எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் என தொடர்ந்து அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக கட்சியிலும் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். ஆனால் இது போன்ற நகர்வுகளை மேற்கொள்ளாத ஓபிஎஸ் தற்போது தனித்து விடப்பட்டிருக்கிறார். வெறும் பத்து சதவீத நிர்வாகிகள் ஆதரவு கூட அவருக்கு இல்லை.
ஓபிஎஸ் டீம்
ஐந்து மாவட்ட செயலாளர்கள் ஆதரவு மட்டுமே அவருக்கு இருக்கிறது. பெரும்பாலான மா.செ.க்கள் எடப்பாடி தரப்பிலேயே தஞ்சம் புகுந்த நிலையில் வெல்லமண்டி நடராஜன், தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன், ராமநாதபுரம் தர்மர், கோவை செல்வராஜ், புகழேந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டுமே ஓபிஎஸ் தரப்பில் இருக்கின்றனர். அவர்களில் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்ததோடு, கோவையில் எஸ்பி வேலுமணிக்கு எதிராக அரசியல் செய்து வந்தார்.
கோவை செல்வராஜ்
எடப்பாடி தரப்பில் எப்படி ஜெயக்குமாரோ அதே போல ஓபிஎஸ் தரப்பில் செய்தி தொடர்பாளர் போலவே கோவை செல்வராஜ் இருந்தார். குறிப்பாக எடப்பாடி, கேபி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முக, எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரை மிக கடுமையாக விமர்சித்து வந்தார். உரிய அறுவை சிகிச்சை அளித்திருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றி இருக்கலாம் என கூறி அதிர வைத்தவர் தான் இந்த கோவை செல்வராஜ். ஓபிஎஸ் தரப்புக்கு ஊடகங்களிலும் பொதுவெளியில் ஓரளவு செல்வாக்கு பெற காரணமாக இருந்தவரும் கோவை செல்வராஜ் தான்.
கட்சியில் இருந்து விலகல்
இந்த நிலையில் தான் தற்போது அதிமுகவில் இருந்து விலகுவதாக கூறியிருக்கிறார். ஓபிஎஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சிக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் அதிமுகவை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஓ..பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போடுகின்றனர். அதிமுக என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் நான் இருக்க விரும்பவில்லை. சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்றிய மனசாட்சி இடம் கொடுக்கவில்லை" எனக் கூறியிருக்கும் கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அதிர வைத்திருக்கிறார். இதனால் அவர் வேறு கட்சியில் இணையலாம் எனவும் கூறப்படுகிறது.