மோடியை டாடி டாடி என்று கூப்பிட்ட அதிமுகவினர்... ஒரு அமைச்சர் பதவி கூட தராமல் புறக்கணித்த பரிதாபம்!
Recommended Video
சென்னை: அம்மாவை இழந்த அதிமுகவினர், அப்பா என மோடியை அழைத்து பாஜகவுக்கு விசுவாசமாக இருந்தனர். இருப்பினும் எந்த பயனும் இல்லை. தேர்தலில் தோற்றதோடு மட்டுமல்லாமல் ஒரு அமைச்சர் பதவி கூட கிடைக்காமல் அதிமுகவினர் நொந்து போகினர்.
அம்மாக்கள்தான் எப்போதும் பாசமாக இருப்பார்கள். அப்பாக்கள் கொஞ்சம் கருணையற்றவர்கள்தான் என்பதை இந்த அரசியல் வெற்றிகள் நிரூபித்துள்ளது ஆச்சரியானது. அதிமுகவினர் இன்று நிச்சயம் ஜெயலலிதாவின் வலிமையை உணர்ந்து,அவர் இல்லாமல் போனதை எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள்.
அவரை போன்ற ஒரு வலிமையான தலைவர் அதிமுக இழந்தது. அந்த கட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்தது. அதிகாரம் என்பது ஒன்றை மனிதரிடம் குவிந்தால், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு நிச்சயம் அதிமுக சிறந்த உதாரணம்.
அதிமுகவுக்கு இது தேவையா... பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் எவ்வளவு இழப்புகள் தெரியுமா
அதிமுக மீண்டும் ஆட்சி
5வருடங்கள் முழுமையாக ஆட்சியில் இருந்து எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று 2016ம் ஆண்டு அதிமுகவை இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு கொண்டு வந்தார் ஜெயலலிதா. அதற்கு முன்பாக 2014ம் ஆண்டு யாருடன் கூட்டணி வைக்காமல் 37 தொகுதிகளில் வென்று இந்தியாவின் 3வது மிகப்பெரிய கட்சி என்ற பெருமையை பெற்றார்.
அதிகாரப் போட்டி
இப்படி வலிமையாக இருந்த அதிமுகவுக்கு ஜெயலலிதா இறப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் இல்லாத சூழலில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற அதிகாரப் போட்டிகளில் சிக்கிய அதிமுகவினர் இன்று வரை அதில் மீள முடியாமல் தவிக்கிறார்கள்.
ஜெ இடம் நிரம்பவிலைல
என்ன தான் எடப்பாடி முதல்வராகவும், துணை முதல்வராக ஒபிஎஸ்ம் இருந்தாலும், அதிமுகவில் ஜெயலலிதா இருந்த இடத்தில் யாரையும் வைக்க இவர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என புதிய பதவிகளை ஏற்படுத்தி கொண்டார்கள்.
மோடி தான் தலைவர்
இதனால் இன்றும் அதிமுகவில் இரட்டை தலைமை என்ற நிலை தான் உள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் ஆகட்டும், இளைய தலைவர்கள் ஆகட்டும் யாருமே ஒற்றை தலைமையை விரும்பியதாக தெரியவில்லை. இவர்கள் தங்களுக்கு இடையே நடந்த பங்களாளி சண்டையின் காரணமாக தங்கள் தலைவராக மானசீகமாக ஏற்றுக்கொண்டது பிரதமர் மோடியைத்தான்.
அதிமுக விசுவாசம்
அம்மா இல்லாத நிலையில், அவருக்கு மாற்றாக மோடியை தங்கள் டாடியாக அதிமுகவினர் ஏற்றுக்கொண்டு அவருக்கு விசுவாசமாக இருந்தனர். பாஜக சொன்னபடியெல்லாம், ஏன் சொல்லாமலேயே விசுவாசமாக இருந்து வந்தார்கள். நாடாளுமன்றத்தில் பாஜகவுக்காக பல முறை ஆதரவாக இருந்து செயல்பட்டார்கள்.
ஒரு அமைச்சர் பதவி
அப்படி பாஜகவுக்ககாக செயல்பட்ட அதிமுக இந்த முறை ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் ஜெயிக்க வைக்காத கோபத்தில் இருக்கும் பாஜக தலைமை அதிமுகவுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட தரவில்லை. இதனால் அதிமுவினர் சோகத்தில் உள்ளார்கள. குறிப்பாக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளார்கள்.