மின் கட்டண உயர்வு.. 100க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம்.. கடல் என திரண்ட தொண்டர்கள்!
சென்னை: தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் கண்டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே எழுந்த அதிகார மோதலில், எடப்பாடி பழனிசாமி கைகளே ஓங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோரை தன் பக்கம் இழுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக தனது தலைமையினை தொண்டர்கள் மத்தியில் நிரூபிக்க போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

அண்மையில் தமிழக மின்வாரியத்தின் கடன் மற்றும் மத்திய அரசு அழுத்தம் ஆகியவை காரணமாக மின்சார கட்டண உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, மின்கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், சிவி சண்முகம், ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் திமுக அரசுக்கு எதிராக கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் கருப்பு சட்டை அணிந்தும், அரிக்கேன் விளக்குகளுடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை பெரும் அளவில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். மாவட்ட தலைநகரில் அதிமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருதால், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications