“அதிமுக எப்போதும் நல்லா இருக்கணும்.. இதுதான் எங்க எண்ணம்”.. சொல்வது திமுக அமைச்சர் முத்துசாமி!
சென்னை: அதிமுக எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் அடிப்படை எண்ணம் என்று திமுக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் முத்துசாமி, "திமுகவை நினைக்காமல் யாரும் இருக்க முடியாது. திமுக தான் முதன்மை என அனைத்து தரப்பினருமே கருதுகின்றனர். இதனால் தவெக கட்சியினர் திமுகவை விமர்சித்து வருகின்றனர். விஜய் பேச்சே அதற்கு உதாரணம். திமுக அதன் கொள்கையில் அடிபிறளாமல் சென்று கொண்டிருக்கிறது.

அரசியல் அல்ல, நாட்டுக்காக
ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கொள்கைப் பிடிப்புடன் உள்ள கட்சி திமுக. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் கொண்டு வந்த கொள்கைகளை பின்பற்றி வரும் கட்சி திமுக. திசை திருப்புவதற்காக செய்கிறார்கள் எனப் பேசுவது மிகுந்த வருத்தத்துக்கு உரியது. தமிழ்நாட்டிற்கான நிதி பெறுவது, தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றில் உரிமைகளை பெறுவதற்காக மத்திய அரசிடம் போராடி வருகிறோம்.
மும்மொழிக்கொள்கை, இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பிற்கு போராடுவது என்பது அரசியல் அல்ல. நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சரியான வழியில் திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். இன்றைக்கு திமுக கூட்டணி வலுவாக உள்ளது. இதை திமிராக சொல்லவில்லை" எனத் தெரிவித்தார்.
அதிமுக நல்லா இருக்கணும்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் அடுத்தடுத்து டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, "டெல்லிக்கு மாறி, மாறி அதிமுகவினர் சென்று வந்தாலும், அதிமுகவை அவர்கள் நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் அடிப்படையான எண்ணம்.
தமிழக சட்டமன்றத்தில் கூட எதிர்க்கட்சியினர் வருத்தம் இல்லாத அளவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களை மதித்து செயல்பட்டு வருகிறார். அதிமுக எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்." எனத் தெரிவித்துள்ளார்.
அண்டர்கிரவுண்ட் வேலை செய்யமாட்டோம்
மேலும், தவெக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், திமுக - பாஜக கூட்டு இருப்பதால் தான் டாஸ்மாக் ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முத்துசாமி, "திமுக எப்போதும் எந்தக் கட்சியுடனும் ரகசியமாக கூட்டணி வைத்தது இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தது கூட கருணாநிதி நேரடியாக வெளிப்படையாக அறிவித்துவிட்டுத் தான் மேற்கொண்டார். எப்போதும் ரகசியமாக யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. திமுக ரகசியமாக அண்டர்கிரவுண்ட் வேலை செய்தது கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications