நாலாக உடைந்த அதிமுக.. ஜால்ரா.. பாஜக போட்டியிட்டாலும் வரவேற்போம்..சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: அதிமுக இரண்டாக அல்ல நான்காக உடைந்து போயிருப்பதாக கூறியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
பாஜகவிற்கு 4 பேருமே ஜால்ரா தட்டுகின்றனர். அவர்களின் ஆதரவுடன் பாஜக போட்டியிட்டாலும் வரவேற்போம் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக காங்கிரஸ் தேசிய தலைமை நேற்று அறிவித்தது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதற்கு கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தனக்கு ஆதரவு தரக்கோரி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இந்த நிலையில் இன்று காலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து பேசினார். கமல்ஹாசனை சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவு கேட்டார். மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமலை சந்தித்து இளங்கோவன் ஆதரவு கேட்டார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சுமார் 11,000 வாக்குகள் பெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற எனக்கு அவர் ஆதரவு தரவேண்டும். திமுக கூட்டணியில் அவர் சேர வேண்டும் என்ற எங்களுடைய விருப்பத்தை அவரிடம் கூறினேன். கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக அவர் கூறினார்.
உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், கமல்ஹாசனின் ரத்தத்தில், தேசியமும் காங்கிரஸும் கலந்திருப்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய தந்தை காங்கிரஸ் கட்சியில் தியாகியாக இருந்தவர். மறைந்த தலைவர் காமராஜருக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தவர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருமாறு கமலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். காங்கிரசையும், கமல்ஹாசனையும் பிரிக்க முடியாது. கமல்ஹாசன் கைகொடுப்பது மட்டுமல்ல கைக்கும் ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்.
இடைத்தேர்தலில் கமல் ஆதரவளித்தால் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு தொடக்கமாக அமையும். கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 11,000 வாக்குகள் பெற்றார். கமல்ஹாசனை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. தங்களின் கட்சியினருடன் கலந்து ஆலோசித்த பின் தனது முடிவை கூறுவதாக கமல் என்னிடம் கூறினார். அப்போது செய்தியாளர்கள், அதிமுக இரண்டாக உடைந்து விட்டதாக தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த இளங்கோவன், அதிமுக இரண்டாக உடையவில்லை; நான்காக உடைந்திருக்கிறது என்றார்.
அதிமுகவின் நான்கு அணியினருமே பாஜகவினருக்கு ஜால்ரா தட்டுகின்றனர். நான்கு அணியினரின் ஆதரவுடன் பாஜக போட்டியிட்டாலும் வரவேற்போம் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications