தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு மீதான அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம்- நாளை விவாதம்- வாக்கெடுப்பு!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக தாக்கல் செய்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது சட்டசபையில் நாளை மார்ச் 17 திங்கள்கிழமையன்று விவாதம் நடைபெறும். இந்த விவாதத்துக்குப் பின்னர் அதிமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அதிமுகவின் தீர்மானம் மீதான விவாதத்தின் போது சபாநாயகர் இருக்கையில் துணை சபாநாயகர் அமர்ந்து சபையை வழிநடத்துவார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடரின் நேரலை ஒளிபரப்பில் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று அதிமுக குற்றம்சாட்டியது. கடந்த சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 6-ந் தேதி தொடங்கியது. அந்த தொடர் ஜனவரி 11-ந் தேதி வரை நடைபெற்றது. அக்கூட்டத் தொடரில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகள் லைவ் ஒளிபரப்பில் புறக்கணிக்கப்படுவதாகவும் இந்த விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் அதிமுக அறிவித்தது. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுகவின் சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக பட்ஜெட் சட்டசபை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில், சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மார்ச் 17-ந் தேதி விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சட்டசபை சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பேசுவது டிவியில் காட்டப்படவில்லை என்பது அதிமுக புகார். இதற்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இது பற்றி நாங்கள் பதிலும் அளித்துவிட்டோம். அரசு தரப்புக்கு எந்த குறுகிய எண்ணமும் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டோம்.
கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் தொழில்நுட்ப சிக்கலால் ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டது. இம்முறை அப்படி ஏற்படாது. அதிமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மார்ச் 17 திங்கள்கிழமையன்று விவாதம் நடைபெறும் என்றார்.
சட்டசபையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கப்படும் போது, சபாநாயகர் இருக்கையில் துணை சபாநாயகர் அமர்ந்து சபையை வழிநடத்துவார்; நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட்ட பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications