சென்னை புறநகர் மின்சார ரயிலில் விரைவில் வரும் அதிரடி மாற்றம்? பயணிகளுக்கு 'ஹேப்பி'யான அப்டேட்!
சென்னை: சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு விரைவில் அனைத்து மின்சார ரயில்களும் 12 பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 9 பெட்டிகளுடன் இயங்கி வரும் 40 சதவீத ரயில்கள் முழுவதும் 12 பெட்டிகளாக மாற்றம் செய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னையில் வாகன போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வேலை நிமித்தமும் பல்வேறு காரணங்களுக்காககவும் சென்னையில் சாலையில் பயணிப்பது என்றால் பலரும் வேப்பங்காய் போல கசக்கும் என்றே சொல்லும் அளவுக்கு வாகன நெரிசல் அதிக அளவு உள்ளது.
அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அணிவகுத்து செல்வதை சென்னையின் பிரதான சாலைகள் அனைத்திலும் காணலாம். இதனால் அலுவலகம் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக பயணிக்கும் மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தாங்கள் சென்று அடைவதே பெரிய சாகசம் போல எண்ணும் அளவுக்கு டிராபிக் ஜாம் மாறி வருகிறது.
ஜம்முன்னு ரெடியாகும் சென்னை-பெங்களூர் 8 வழி எக்ஸ்பிரஸ் சாலை! எந்த ரூட்ல போகுது தெரியுமா?
மின்சார ரயில் பயன்பாடு
தனிநபர் வாகன பயன்பாடு அதிகரித்துள்ளதே இதற்கு பெரும் காரணமாக சொல்லப்படுகிறது. பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிவதாலும் பலரும் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற பெரும் நெரிசலில் பயணிக்க வேண்டியிருக்கும் பயணிகளுக்கு வரப்பிரதாசம் போல அமைந்து இருப்பது மின்சார ரயில்கள் தான். டிராபிக் சிக்னல்களில் மாட்டிக்கொண்டு தேவையின்றி நேரம் வீண் ஆகாது.
நிரம்பி வழியும் கூட்டம்
குறிப்பிட்ட இடத்திற்கு திட்டமிட்டபடி சென்று சேர்ந்துவிடலாம் என்பதால் பயணிகள் பலரும் புறநகர் மின்சார ரயில்களையே நாடி செல்கின்றனர். பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சென்னை கடற்கரை மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி வழித்தடங்களில் சுமார் 500 மின்சார ரெயில்கள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன. இந்த மின்சார ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழியும்.
படிக்கட்டுகளில் தொங்கியபடி
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்வோர் என பல தரப்பினரும் மின்சார ரயிலை நாடி வருவதால், மின்சர ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலும் பரபரப்பான நேரங்களில் மின்சார ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் அளவுக்கு கூட்டம் அதிகமாக உள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் சில மின்சார ரெயில்களை தவிர, மற்ற அனைத்து ரெயில்களும் 12 பெட்டி மின்சார ரெயில்களாக இயக்கப்படுகின்றன. இது பயணிகள் கூட்ட நெரிசலை ஓரளவு தவிர்க்கும் வகையில் உள்ளது.
12 பெட்டிகளாக மாற்றம்
அதேவேளையில், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 60% மின்சார ரயில்களில் மட்டுமே 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 40 % ரயில்கள் 9 பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் கடும் நெரிசலான சூழலில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் அனைத்து மின்சார ரயில்களையும் 12 பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் சொல்லப்படுகிறது.
நடைமேடைகள் விரிவாக்கம் செய்யும் பணிகள்
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, "மின்சார ரயில்களில் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி செல்ல வசதியாக அனைத்து ரயில்களும் 12 பெட்டிகளுடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 12 பெட்டிகள் நிற்கும் வகையில் நடைமேடைகள் விரிவாக்கம் செய்யும் பணிகள் முடிந்து விட்டது. சில ரயில் நிலையங்களில் நடக்கும் பணிகளும் விரைவில் முடிந்துவிடும். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மின்சார ரயில்களும் 12 பெட்டிகளாக மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.