அதிமுக பொதுக்குழு வழக்கு: அனைத்து தரப்பும் வாதங்களும் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல்!
சென்னை: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பும் இன்று மாலை 3 மணிக்குள் இறுதி வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உள்ளன.

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி கோஷ்டி ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவை கூட்டியது. அப்பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யபட்டன.
இதனையடுத்து அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழுவுக்கு எதிராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லாது; அதிமுகவில் ஜூன் 23-ந் தேதி என்ன நிலை இருந்ததோ அதுவே தொடர வேண்டும் என உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனின் இந்த தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இம்மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், தனிநீதிபதி யூகங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி உள்ளார். பெரும்பான்மையான அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளுக்கு எதிரானதாக தனிநீதிபதி உத்தரவு உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் என்கிற ஒரு நபர் மட்டுமே ஆதாயம் அடையும் வகையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிட்டார். அவர் தமது வாதத்தில், ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செயல்படப் போவது இல்லை. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் அதிமுக கட்சி நடவடிக்கைகள் முடங்கும். உட்கட்சி விவகாரங்களில் தலையிடும் வகையிலான தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செயய் வேண்டும் என்றார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தமது இறுதி வாதத்தை முன்வைத்தன.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்ராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். அத்துடன் அனைத்து தரப்பும் தங்களது எழுத்துப் பூர்வமான வாதங்களை வெள்ளிக்கிழமை மாலை (இன்று) தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இதனடிப்படையில் இன்று அனைத்து தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களது இறுதி வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உள்ளனர்.












Click it and Unblock the Notifications