சபாஷ்.. தண்டோரா போடும் பணியில் இருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் - கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு!
சென்னை : 'தண்டோரா' போடும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தண்டோராவுக்கு தடை விதித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவு பரவலான வரவேற்பைப் பெற்றது. அதேநேரத்தில், தண்டோரா போடும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மாற்றுத் தொழில் குறித்து அச்சம் வெளிப்படுத்தியிருந்தனர்.
இதையடுத்து தண்டோரா போட்டு வந்தவர்களின் வாழ்வாதாரத்துக்காக மாற்றுப் பணிகளுக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதை கருத்தில் கொண்டு தண்டோரா தடைக்கான அரசாணையுடன் அந்த தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் குறித்தும் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

தலைமை செயலரின் கடிதம்
தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதம் சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

தண்டோரா போட தடை
தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, தண்டோரா போடும் நடைமுறைக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், சட்டம் மற்றும் ஒழுங்கு, இயற்கை இடர்பாடுகள் மற்றும் இன்ன பிற அரசின் முக்கிய செய்திகளை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு சேர்க்கும் பொருட்டு, விளம்பரம் செய்யும் விதமாக 'தண்டோரா' போடும் முறை காலம் காலமாக நடைமுறையில் இருந்த பழக்கம். அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தமுக்கடிப்பு செய்வது
அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இக்காலத்தில், தமுக்கடிப்பினால் தண்டோரா போட்டு அரசின் முக்கிய செய்திகளை விளம்பரம் செய்தல் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி மாற்று ஏற்பாடுகளை செய்யும் வண்ணம் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளனர். தமுக்கடிப்பினால் தண்டோரா போட்டு அரசின் முக்கிய செய்திகளை விளம்பரம் செய்வதை அரசு கூர்ந்தாய்வு செய்து, தமுக்கடிப்பினால் 'தண்டோரா' போடும் நடைமுறை எந்தெந்த துறைகளில் நடைமுறையில் உள்ளதோ, அதற்கு முழுமையாக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.

மாற்று ஏற்பாடு
இது தொடர்பான அரசின் ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்தையும் மாற்றியமைக்க உத்தரவிடப்படுகிறது மாற்று ஏற்பாடாக, அரசின் முக்கிய செய்திகளை மிக விரைவாக மக்களிடம் சேர்க்கும் விதத்தில், ஆட்டோ ரிக்ஷா, சைக்கிள் போன்ற பொருத்தமான வாகனங்களில் ஒலி பெருக்கிகளை பொருத்தி, தமிழ்நாட்டின் கிராமப் புறங்களின் மூலை முடுக்குகளிலெல்லாம் விளம்பரம் செய்வதை நடைமுறைப்படுத்தலாம்.

பணியாளர்களுக்கு
தண்டோரா போடும் பணியில் ஏதேனும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுப்பதை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி தண்டோரா போடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், இதனை ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவும் அளவுக்கு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications