திராவிடம் இல்லா தமிழகமே அண்ணாமலையின் முடிவு.. ஃபுல்ஸ்டாப் வைக்காமல் கிளறும் அமர்பிரசாத் ரெட்டி
திராவிடம் இல்லாத தமிழகமே அண்ணாமலையின் தீர்க்கமான முடிவு என அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டரில் கருத்து
சென்னை: திராவிடம் இல்லாத தமிழகமே அண்ணாமலையின் தீர்க்கமான முடிவு என பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திராவிடம் இல்லாத் தமிழகம்; ஊழல் இல்லா தமிழகம். அதுவே எங்கள் உயிர்மூச்சு என்பதே அண்ணாமலையின் தீர்க்கமான முடிவு.
தமிழக நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவை தொண்டர்களும்; மக்களும் வரவேற்கின்றனர். தொண்டர்கள் விருப்பத்தை வெளிப்படுத்திய தலைவருக்கு கோடானு கோடி நன்றிகள்! என ட்விட்டரில் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பிரச்சினை
இந்த பிரச்சினை குறித்து மேலும் வளர்க்கக் கூடாது என பாஜக மூத்த நிர்வாகிகள் நினைத்தாலும் அமர்பிரசாத் ரெட்டி போன்றோர் விடாமல் விமர்சித்து வருவது அதிமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தி வருவதாகவே தெரிகிறது. சென்னை அரும்பாக்கத்தில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் இனி கூட்டணி வேண்டாம்.

கூட்டணி வேண்டாம்
திராவிட கட்சிகளுடன் கூட்டணியே வேண்டாம். அப்படி வைத்தால் நான் என் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தொண்டனாக செயல்படுவேன். கூட்டணிக்காக நான் யாருக்கும் சலாம் போடமாட்டேன் என கூறியிருந்தார். இந்த கருத்து அதிமுக மட்டுமல்ல பாஜக நிர்வாகிகள் மத்தியில் கூட சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு முன்பு அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் பேசாமல் இருந்தவ நிர்வாகிகள் நேற்று மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

4 எம்எல்ஏக்கள்
அண்ணாமலையின் பேச்சை 4 எம்எல்ஏக்களில் இருவர் எதிர்த்துள்ளனர். அதாவது வானதியும் நயினாரும் எதிர்த்துள்ளனர். அது போல் மூத்த நிர்வாகிகள் பலரும் தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். ஆனால் அமர் பிரசாத் ரெட்டி போன்றோர் அண்ணாமலைக்கு ஆதரவாகவும் அவருடைய கருத்தை ஏற்பதாகவும் பேசி வருகிறார்கள். அந்த வகையில் அமர் பிரசாத் ரெட்டி தனது ட்வீட்டில் சூரியன் திசை மாறி உதித்தாலும் எங்கள் தலைவரின் சொல் மாறப்போவது இல்லை. 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம் என கூறியுள்ளார்.

ஆட்சி மாற்றம்
அடுத்த ட்வீட்டில் தமிழகத்துக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல அரசியலில் மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்க தான் தன் ஐபிஎஸ் பதவியை விட்டுட்டு தமிழகத்துக்கு வந்தவர் தலைவர் அண்ணாமலை அவர்கள். ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கனவு. ஒரு நாளும் ஊழலை ஏற்றுக்கொள்ளவே முடியாது என கூறியுள்ளார். அதிமுகவை ஊழல் கட்சியாக இவர் மறைமுகமாக விமர்சித்ததாகவே பார்க்கப்படுகிறது.

திராவிடம் இல்லா தமிழகம்
இதற்கு அடுத்து மற்றொரு ட்வீட்டில் 'திராவிடம் இல்லாத் தமிழகம்; ஊழல் இல்லா தமிழகம். அதுவே எங்கள் உயிர்மூச்சு என்பதே அண்ணாமலையின் தீர்க்கமான முடிவு. தமிழக நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவை தொண்டர்களும்; மக்களும் வரவேற்கின்றனர். தொண்டர்கள் விருப்பத்தை வெளிப்படுத்திய தலைவருக்கு கோடானு கோடி நன்றிகள்! என தெரிவித்துள்ளார். பாஜக மூத்த நிர்வாகிகள் அதிமுகவை சமாதானப்படுத்த விரும்பும் நிலையில் அமர்பிரசாத் ரெட்டி போன்றோர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் மீண்டும் மீண்டும் கிளறி வருவதாகவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

26 இல் மோடியை சந்திக்கும் அண்ணாமலை
தற்போது சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை சந்திக்கிறார் அண்ணாமலை. அவர்களுடன் நேற்றைய தினம் தான் பேசிய கருத்து குறித்து விளக்கமளிப்பார் என தெரிகிறது. அது போல் வரும் 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை அண்ணாமலை சந்திக்கிறார். அப்போது அதிமுகவுடனான கூட்டணி வைக்க விரும்பவில்லை என அண்ணாமலை குறிப்பிடுவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications