அம்பேத்கர் சிலைக்கு விபூதி பூச மாட்டேன்! நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்த அர்ஜுன் சம்பத்!
சென்னை: அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளார்.
மேலும் அம்பேத்கர் சிலைக்கு விபூதி குங்குமம் பூச மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

அர்ஜுன் சம்பத் மனு
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும்போது பாதுகாப்பு வழங்க பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி அர்ஜுன் சம்பத் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் உத்தரவாதம்
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அர்ஜுன் சம்பத் தரப்பில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டோம், போக்குவரத்துக்கோ அல்லது பொது மக்களுக்கோ இடையூறு ஏற்படுத்த மாட்டோம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

விபூதி பூச மாட்டேன்
மேலும், அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கவோ, காவி துண்டு போடுவதோ அல்லது விபூதி மற்றும் குங்குமம் வைக்கவோ மாட்டேன் எனவும் அந்த உத்தரவாத கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என்றும் உத்தரவாத கடிதத்தில் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு
இதை ஏற்றுக்கொண்டு அம்பேத்கர் மணி மண்டபத்தில் அர்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி சந்திரசேகர் வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications