தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு தடை
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டத்தில் இருந்தே, கடந்த 68 நாட்களாக வைரஸ் பாதிப்பு குறைந்தே வந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, கூடுதல் தளர்வுகளின்றி வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாக்..! தமிழ்நாட்டில் மீண்டும் உயரத் தொடங்கும் கொரோனா.. 23 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு
மூன்று மாவட்ட கோயில்கள்
ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக மதுரை, சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி ரத்து
ஏற்கனவே, திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில், மதுரை மீனாட்சியம்மன், அழகர் கோயில், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை கோயில்களிலும் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் மற்றும் அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய கோயில்கள்
வடபழனி, சூலை அங்காளபரமேஸ்வரி, கந்தசாமி கோவில், பாடி படவேட்டம்மன் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருச்சி ஸ்ரீரங்கம், வக்காளியம்மன், மலைக்கோட்டை கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும், பழனி ,கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முக்கிய கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 68 நாட்கள் தொடர்ந்து குறைந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் கடந்த மூன்று நாட்களாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 1947 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதைவிடக் கூடுதலாக 39 பேருக்கு, அதாவது 1986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 23 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
இன்றும் கோவை மாவட்டத்தில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு இன்று 246 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 27ஆம் தேதி வைரஸ் பாதிப்பு 109ஆகக் குறைந்திருந்த நிலையில், இன்று 204 பேருக்குத் தலைநகரில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிரச் செங்கல்பட்டு (122), ஈரோடு (165), தஞ்சை (124) ஆகிய மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது. பாசிட்டிவ் விகிதம் எனப் பார்த்தால் தமிழ்நாட்டில் அதிகபட்சமாகத் தஞ்சை மாவட்டத்தில் பாசிட்டிவ் விகிதம் 2.5% ஆகவும் சேலம் மற்றும் திருச்சியில் பாசிட்டிவ் விகிதம் 2.2%ஆகவும் உள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.2% ஆக உள்ளது. முன்னதாக கொரோனா அதிகரிக்கும் தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு மத்திய அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூரில் பக்தர்கள் மறியல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் நேற்று இரவு தெரிவித்து. தாமதமான இந்த அறிவிப்பால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கூட்டம் இன்று அலை மோதியது. மேலும் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ரவுண்டானா சாலை முன்பு உள்ள நுழைவாயில் முன்பு காவல்துறையினர் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் ரவுண்டானா சாலை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் பக்தர்கள் தங்களை கோவில் நுழைவாயில் முன்பு வரை அனுமதி வழங்கினால் கோபுர தரிசனம் செய்து விட்டு செல்வதாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் கலைந்து சென்றனர்.