நீங்க கேட்டா கிடைக்காது..‘டெல்லி டு தமிழ்நாடு’- "யூஸ் பண்ணிக்கோங்க” அமித்ஷா அமைத்து கொடுத்த வியூகம்!
சென்னை : சென்னை வந்திருந்த அமித்ஷா, பாஜக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்போது தேர்தலைக் குறிவைத்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, மத்திய அமைச்சர்களின் வருகையை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அவர் அறிவுறுத்தியதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள் பட்டியலை வைத்து என்னென்ன செய்யலாம் என்று அமித்ஷா, தமிழக பாஜகவினருக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கி உள்ளாராம்.
மேலும், குஜராத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை வழங்குவோம், அதனை பின்பற்ற வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாராம்.
மேலும், இந்த ஆலோசனைக் கூடத்தில் தமிழகத்தில் எத்தனை இடங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம், எந்தெந்த கட்சிகள் நம்முடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கின்றன, யாரைச் சேர்த்தால் வெற்றி வாய்ப்பு இன்னும் அதிகரிக்கும் என்பது பற்றியும் அமித்ஷா ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமலாலயத்தில் அமித்ஷா
சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சனிக்கிழமை பிற்பகலில் சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்றார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கமலாலயம் வந்த அமித்ஷாவை புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் சந்தித்துப் பேசினர். அதைத்தொடர்ந்து பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் கோர் கமிட்டி மெம்பர்களான 84 பேர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் 2024 லோக்சபா தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் பல்வேறு ஆலோசனைக் கூறியிருக்கிறார் அமித்ஷா.

நாம் மட்டும் தான்
தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், திமுகவும், அதிமுகவும்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருவதை மாற்றிக்காட்ட வேண்டும், தமிழகத்தில் மோடி மீது மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அதனை பயன்படுத்தி, தமிழகத்தில் பாஜகவை வலுவான கட்சியாக வளர்க்க வேண்டும், திமுக, அதிமுகவை தவிர ஒரு கட்சி இங்கு ஆட்சிக்கு வர முடியும் என்றால் அது பாஜகவாகத்தான் இருக்க முடியும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாக கூறப்படுகிறது.

நிர்வாகிகளுக்கு மெசேஜ்
மேலும், குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் முக்கிய நிர்வாகிகளை அழைத்து தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவோம். அதன்படி, நிர்வாகிகள் முழுவீச்சில் பணிகளில் ஈடுபட வேண்டும் அதனை பின்பற்றிச் செயல்பட்டால் வரும் தேர்தலில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெறுவது நிச்சயம், அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும் அமித்ஷா ஆலோசனை வழங்கியதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

டெல்லி டு டி.என்
மேலும், டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து தமிழகம் வருகிறார்கள். அவர்களது விசிட்டை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள், மத்திய அமைச்சர்களின் வருகையை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லுங்கள், இங்கு ஆளுங்கட்சியாக திமுகவுக்கு அதில் ஆர்வம் இருக்காது, நாம் தான் முன்னின்று செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய பாஜக அரசின் திட்டங்களால் நலத்திட்ட உதவிகளைப் பெற்றவர்களின் விவரங்களைப் பெற்றால் அதன் மூலம் பல விஷயங்களைச் சாதிக்கலாம்.

லிஸ்ட் வாங்குங்க
நீங்கள் கேட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள் பட்டியல் கிடைக்காது, ஆனால், மத்திய அமைச்சர்கள் கேட்டால் கிடைக்கும், அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மத்திய அரசின் சாதனைகளை, திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள், பயனாளிகளை அந்தந்த பகுதி நிர்வாகிகள் மூலம் சந்தித்து ஆதரவு திரட்டுங்கள், அவர்களை பூத் கமிட்டியில் சேருங்கள், நாம் ஆளுங்கட்சியாக இருப்பதன் பெனிஃபிட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அட்வைஸ் கொடுத்துள்ளாராம் அமித்ஷா.

நம்பிக்கை இருக்கு
மேலும், தமிழக பாஜகவின் செயல்பாடுகள் மீது மேலிடத்தில் நிறைய நம்பிக்கை இருக்கிறது. இன்னும் வேகம் காட்டுங்கள், அதைத்தான் எதிர்பார்க்கிறோம். உங்கள் உழைப்புக்கேற்ற பலனை நிச்சயம் பெறுவீர்கள். பாஜக அடிப்படை உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க உழைக்க வேண்டும், பூத் கமிட்டியை பலப்படுத்துவதற்கான வியூகங்களை செயல்படுத்த வேண்டும், தமிழக அரசியல் களத்தையே நாம் தான் மாற்றப் போகிறோம், கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்றும் பாஜகவின் நிர்வாகிகள் மத்தியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications