ஆமா.. ஏன் எல்லாரும் திடீர்னு படையெடுத்து வர்றாங்க.. சந்தேகக் கண்ணுடன் ஓபிஎஸ்!
Recommended Video
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி திமுக, அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். இது ஓபிஎஸ் தரப்புக்கு பல சந்தேகங்களைக் கொடுப்பதாக உள்ளதாம்.
சமீப காலமாக அமமுக உடைந்து சிதறி வெடித்துக் கொண்டுள்ளது. அதிலிருந்து வெளிக் கிளம்பி வருவோரில், செந்தில்பாலாஜி, தங்க.தமிழ்ச்செல்வனை தவிர மற்றவர்கள் யாரும் திமுக முகாமுக்கு செல்லவில்லை. ஆனால் அதிமுகவுக்கு பலர் படையெடுத்து இணைந்து வருகின்றனர்.
அதுவும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.முன்னிலையில் இல்லாமல் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். முன்னிலையில் இணைப்பு நிகழ்வு அரங்கேறி வருகிறது.
முத்தையா
பாப்புலர் முத்தையா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து இ.பி.எஸ்.ஆதரவு நிலைப்பாடு எடுத்த ரத்தினசபாபதி உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் என எல்லோரும் இ.பி.எஸ்.க்கு முக்கியத்துவம் அளித்து அவரை சந்தித்தும் இணைந்தும் வருகிறார்கள்.
முதலில் ஈபிஎஸ்
இசக்கி சுப்பையா கூட இணைப்பு விழாவுக்கு இ.பி.எஸ்.சை மட்டும் தான் முதலில் அணுகினாராம், பின்னர் தான் ஓ.பி.எஸ்.சையும். இணைப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தாராம். கட்சி புரோட்டகால்படி ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.க்கு தான் முக்கியத்துவமும், முன்னிலையும் அளிக்கப்பட வேண்டும்.
சந்தேகத்தில் ஓபிஎஸ்
ஆனால் அதிமுகவுக்கு புதிதாக வருபவர்கள், வருவதற்காக தூது விட்டுள்ளவர்கள் என அனைவரும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். இதனை சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் ஓ.பி.எஸ்., அமமுகவில் இருந்து இங்கு வருபவர்களை நம்பலாமா இல்லை குழப்பத்தை ஏற்படுத்துவார்களா என யோசிக்கிறாராம்.
ஸ்லீப்பர் செல்கள்
எதற்கெடுத்தாலும் ஸ்லீப்பர் செல் என்று குறிப்பிட்டு பேசும் டிடிவி, அதிமுகவில் குழப்பம் விளைவிக்கும் நோக்கில் ஆட்களை அனுப்புகிறாரா என்ற கோணத்திலும் சிந்திக்கிறதாம் தேனி முகாம்.
அப்படியெல்லாம் இல்லை
ஆனால் அமைச்சர்கள் சிலரோ, ஒரு பிரச்சனையும் இல்லை தினகரனிடம் இருக்க முடியாமல் தான் நிர்வாகிகள் இங்கு வருகிறார்கள், அதனால் சந்தேகத்திற்கு இடமில்லை என ஓ.பி.எஸ்.சிடம் சர்டிஃபிகேட் கொடுத்து வருகிறார்களாம்.