அட கடவுளே.. போச்சா.. அமமுகவுக்கு ஒரு இடத்துல கூட டெபாசிட் கிடைக்கலையே...!
சென்னை: அமமுக போட்டியிட்ட அனைத்த தொகுதியிலும் டெபாசிட் இழந்துள்ளது.
அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் வசம் சென்ற பின் அமமுக என்ற தனிக்கட்சியை தொடங்கினார் டிடிவி தினகரன். இவர் ஜெயலலிதா மறைந்த பின் அவர் எம்எல்ஏவாக இருந்த ஆர்கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்எல்ஏவானார்.
ஆர்கே நகர் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று திமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளினார் டிடிவி தினகரன். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் தினகரன் அனைத்து அரசியல் கட்சிளாலும் உற்று நோக்கப்பட்டார்.
செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!
அமமுக போட்டி
இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என 38 தொகுதிகளில் அமமுக கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. தென் சென்னை தொகுதியில் மட்டும் எஸ்டிபிஐ கட்சி அமமுக ஆதரவுடன் போட்டியிட்டது.
ஆட்சியை கலைப்போம்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமமுக கட்சியின் பொதுச்செயலாளரான தினகரனும், கட்சியின் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கலைக்க திமுகவுக்கு ஆதரவு தருவோம் என்று கூறினார் தினகரன்.
அமமுக பின்னடைவு
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அமமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
பின்னுக்கு தள்ளப்பட்ட அமமுக
சில தொகுதிகளில் மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும் கூட கணிசமான வாக்குகளை பெற்றன. ஆனால் அமமுக கட்சி சொற்ப வாக்குகளை பெற்று பின்னுக்கு தள்ளப்பட்டது.
டெபாசிட் காலி
இந்நிலையில் அந்தக்கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழப்பது தெரியவந்துள்ளது. ஒரு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும்.
ரூ.25000 அம்போ
ஆனால் அமமுகவின் வாக்கு சதவீதம் அதளபாதாளத்துக்கு சென்றுள்ளதால் அக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவுடன் வேட்பாளர்கள் 25 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்துள்ளனர் என்பத குறிப்பிடத்தக்கது.