தாம்பரம், செங்கல்பட்டு களத்தில் அமுதா ஐஏஎஸ்.. மழை நிவாரண பணிகளுக்கு 4 அதிகாரிகளை நியமித்த தமிழக அரசு
சென்னை: மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமுதா ஐ.ஏ.எஸ், கார்த்திகேயன்.ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட 4 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று வெள்ள நிவாரணம் தொடர்பான பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் நியமனம்
என்னதான் முதல்வரும் அமைச்சர்களும் இந்த பணிகளை செய்தாலும் கூட, அரசு அதிகாரிகள் கூடுதலாக இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம். இதற்கான உத்தரவை தான் இன்று தமிழக அரசு பிறப்பித்துள்ளது. பருவமழை கண்காணிப்பு அதிகாரிகளாக நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அமுதா ஐஏஎஸ்
ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், தாம்பரம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதி ஆகிய புறநகர் சென்னை ஏரியாக்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிவாரண பணிகளை கண்காணிப்பார். கோபால் ஐஏஎஸ்- சென்னை தெற்கு பகுதிக்கான அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கார்த்திகேயன் ஐஏஎஸ்- சென்னை வடக்கு, பன்கஜ் குமார் பன்சல் ஐஏஎஸ்- மத்திய சென்னை பகுதிக்கான அதிகாரியாகும். பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக இருந்து மாநில அரசுப் பணிக்கு திரும்பிய அமுதா ஐஏஎஸ், தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக சில தினங்கள் முன்பு நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎஸ் அதிகாரிகள்
இதேபோன்று ஐபிஎஸ் அதிகாரிகளும், மேற்பார்வை பணிகளுக்காக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் - சென்னை, ஜெயந்த் முரளி - காஞ்சிபுரம், கபில் குமார் - விழுப்புரம், வன்னியப் பெருமாள் - கோவை, அம்ரேஷ் புஜாரி - வேலூர் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ககன்தீப்சிங் பேடி
சென்னையை பொறுத்த அளவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையராக இருப்பவருமான ககன்தீப்சிங் பேடி வெள்ள நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் பாதிப்பு ஏற்பட்டபோது சிறப்பாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் ககன்தீப்சிங் பேடி. எனவே சென்னையிலும் அவர் சிறப்பாக பணிகளை மேற்கொள்வார் என்று நம்பிக்கை அரசுக்கு இருக்கிறது. அதேநேரம் திறமையான அதிகாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு சென்னையின் அண்டை மாவட்டங்களில் வெள்ள கண்காணிப்பு பணிகளை வழங்கி உள்ளது தமிழக அரசு.

மழை தொடரும்
அடுத்தடுத்த நாட்களிலும் சென்னையில் கனமழை தொடரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்பதால், முழு அரசு இயந்திரத்தையும் இந்த பணியில் அரசு களமிறக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications