ஒரே ஒரு பிரியாணியால்.. அப்படியே விக்கித்து போன சென்னை.. கேட்ட அலறல் சத்தம்.. என்ன கொடூரம் இது?
சென்னை: பிரியாணிக்காக ஏற்பட்ட தகராறில் பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் சென்னையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் 25 வயது இளைஞர் பாலசந்தர். பொறியியல் பட்டதாரியான இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நண்பர்களுடன் விளையாடிவிட்டு இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்பியுள்ளார். அப்போது இவரது வீட்டிற்கு வந்த அலுவலக நண்பர்கள் வெளியே சாப்பிட போகலாம் என அழைத்துச் சென்றுள்ளனர்.

பாலசந்தர், அவரது நண்பர்கள் முகேஷ் உட்பட மூவர் மண்ணூர்பேட்டை அருகே உள்ள பிரியாணி கடையில் சாப்பிட சென்றிருக்கின்றனர். இதே கடையில் நெப்போலியன், அஜீத், சங்கர்பாய் மற்றும் வெங்கடேஷ் என 4 இளைஞர்கள் பிரியாணி பார்சல் வாங்க சென்றிருக்கின்றனர். கடைக்காரர் முதலில் வந்த பாலச்சந்தருக்கும் அவரது நண்பர்களுக்கும் பிரியாணியை கொடுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த நெப்போலியன் கேங், வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறது.
இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில், பாலசந்தர் தான் வைத்திருந்த ஹெல்மெட்டை கொண்டு நெப்போலியனை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்து வெளியேறிய நெப்போலியன் கேங், கடையின் வாசலில் காத்திருந்திருக்கின்றனர். சில நிமிடங்கள் கழித்து பாலச்சந்தரும் அவரது நண்பர்களும் வெளியே வந்தபோது நெப்போலியன் தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து ஒரே போடாக பாலசந்தரின் கழுத்தில் வெட்டியுள்ளார்.
இந்த எதிர்பாராத தாக்குதலில் அதே இடத்தில் சரிந்த பாலசந்தரை காப்பாற்ற அவருடைய நண்பர் முகேஷ் முயன்ற நிலையில் அவரது முதுகிலும் வெட்டு விழுந்திருக்கிறது. இதனால் அவர் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். பின்னர் தனியாக மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாலசந்தரை நெப்போலியன் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். இந்த சம்பவம் நடந்தபோது பிரியாணி கடையில் ஆட்கள் இருந்திருக்கின்றனர்.
ஆனால் யாரும் தடுக்க முன்வரவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாலசந்தரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட அவர்கள், நெப்போலியன், அஜீத், சங்கர்பாய் மற்றும் வெங்கடேஷ் என 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து விளக்கமளித்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், "சாதாரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறு இப்படி கொலையில் முடிந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நெப்போலியன் மற்றும் சங்கர்பாய் ஆகியோர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர்கள் அத்திப்பட்டு ஐசிஎப், அயனாவரம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் இதேபோன்ற மற்றொரு கேங் இளைஞர்களுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருப்பதால் இவர்கள் எப்போதும் கையில் ஆயுதங்களுடன் சுற்றி வந்திருக்கின்றனர்.
இந்த ஆயுதத்தை வைத்துதான் அவர்கள் பாலசந்தரை கொலை செய்திருக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்" என்று கூறியுள்ளனர். சாதாரண பிரியாணிக்காக வாக்குவாதம் ஏற்பட்டு அது கொலையில் முடிந்திருக்கும் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications