பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை! சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்!
சென்னை: பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதித்து கொண்டுவரப்பட்ட சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தாம் மத்திய அமைச்சராக இருந்த போது 14 ஆண்டுகளுக்கு முன் இதே காந்தி பிறந்த நாளில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதித்து கொண்டுவரப்பட்ட சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்ததாக கூறியுள்ளார்.
இது தொடர்பான அவரது பதிவின் விவரம் வருமாறு;

பொது இடங்களில் புகை
இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம், 14 ஆண்டுகளுக்கு முன் இதே காந்தி பிறந்த நாளில், நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, நீண்ட அரசியல், சட்டப் போராட்டத்திற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது. அது ஒரு வரலாற்று நிகழ்வு!

புகைத்தடை சட்டம்
புகைத்தடை சட்டம் இன்று வரை ஏட்டில் இருந்தாலும் நடைமுறையில் இல்லை என்பது தான் வேதனையான உண்மை. பொது இடங்களில் ஏராளமானோர் எந்த தடையும், தயக்கமும் இன்றி புகைப்பிடிக்கின்றனர். அதனால், பெண்களும், குழந்தைகளும் முகம் சுழிப்பதையும் காண முடிகிறது!

பெருங்கேடு இது
இந்தியாவில் புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பிறர் பிடித்து விடும் புகையை சுவாசிப்பதால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். பொது இடங்களில் புகைப்பதை அனுமதிப்பதால் ஏற்படும் பெருங்கேடு இது!

தீவிரம் வேண்டும்
யாரோ புகைப்பதை சுவாசிப்பதால் எந்தத் தவறும் இழைக்காத பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இதைத் தடுக்க பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் காந்தியடிகள் பிறந்த இந்த நாளில் இருந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!












Click it and Unblock the Notifications