பஞ்சாப்: தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்- அன்புமணி, டிடிவி தினகரன், திருமுருகன் காந்தி கண்டனம்
சென்னை: பஞ்சாப் மாநிலத்தில் தமிழ்நாட்டு கபடி வீராங்கனைகள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் நமது வீராங்கனைகளை பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:

பஞ்சாப் மாநிலம் பதின்டா நகரில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின் போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டிருப்பதாகவும், பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
பிகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியுடன் இன்று நடைபெற்ற போட்டியின் போது, பிகார் வீராங்கனைகளின் விதிமீறல்கள் குறித்து புகார் செய்ததால், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. பஞ்சாப் மாநில அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதேபோல், தமிழக பயிற்சியாளர் மீதான வழக்கை திரும்பப் பெறச் செய்வதுடன், பிகார் அணியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்க சென்றிருந்த அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு, தமிழக பயிற்சியாளரையும் அம்மாநில காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
உரிய விதிமுறைகளை பின்பற்றி கபடி போட்டியை நடத்த வேண்டிய நடுவர்களே விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதோடு, அதனை சுட்டிக்காட்டிய தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, பஞ்சாப் மாநில அரசை தொடர்பு கொண்டு தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக கபடி பெண்கள் அணியின் பயிற்சியாளரையும், வீராங்கனைகளையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி: பஞ்சாபில் தமிழக பெண் கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய மோசமான தாக்குதல் இது.
பெண் வீராங்கனைகளை மிகமோசமாக தாக்கும் பஞ்சாப் மாநிலத்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும். நம் வீரர்களுக்கு உரிய பாதுகாப்பளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையை துணிச்சலாக எதிர்த்து நின்ற நம் வீராங்கனைகளுக்கு துணை நின்று ஆதரவளிப்போம். அந்த வீராங்கனைகளை வரவேற்கவும், அவர்கள் மீதான தாக்குதலுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் அழுத்தத்தையும் கொடுப்போம். தமிழன் மீதான தாக்குதல் எங்குநடந்தாலும் நாம் ஒன்றுபட்டு எதிர்வினை செய்வோம். இவ்வாறு திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications